யாருக்கும் இடமில்லை.. அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி தான்.. பொள்ளாச்சி ஜெயராமன் ‛பளீச்’
சென்னை: ‛‛அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும். அதிமுக என்றால் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி என்றால் அதிமுக'' என பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
அதிமுகவில் உள்கட்சி பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரட்டை தலைமைக்கு எதிராக வெடித்த உள்கட்சி பிளவால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் என 2 தரப்பு தனித்தனியே செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் சென்னை வானகரத்தில் கடந்த மாதம் 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பு செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் மீது 7 பிரிவுகளில் வழக்கு
முன்னதாக கடந்த மாதம் 11ம் தேதி ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் சென்றனர். அப்போது அங்கு இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் மற்றும் நிர்வாகிகள் காயமடைந்தனர். மேலும் பூட்டு உடைத்து ஓ பன்னீர் செல்வம், ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டை போலீசில் அதிமுக எடப்பாடி கோஷ்டியின் சிவி சண்முகம் ஒரு புகார் கொடுத்தார். ஓபிஎஸ் உள்ளிட்டோர் சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவைகளை திருடி சென்றதாக கூறினார். அதன்பேரில் ஓ பன்னீர் செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணை வேண்டும்
இந்நிலையில் டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளும் எம்எல்ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக அலுவலகம் தொடர்பான விஷயத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக்கூறி வழக்கு தொடர்ந்துள்ளோம். நியாயமாக விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளோம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்
எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்ந்த அதிமுக அலுவலகமான எங்கள் கோவிலை காலால் எட்டி உதைத்து அக்கிரமம் செய்தவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் குற்றவாளிகளை நீதிமன்றம் தான் நிர்ணயம் செய்யும்.மேலும் குற்றவாளிகள் யார்? என்பதை தமிழக மக்களே தொலைக்காட்சியின் வாயிலாக பார்த்துள்ளனர்.

அதிமுக என்றால் எடப்பாடி
அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு என்பது அதிமுக கட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சிறப்பாக செயல்படும் வகையில் அமையும் என கருதுகிறேன். அதிமுக என்றால் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி என்றால் அதிமுக. தமிழகத்தில் 4 ஆண்டுகால ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக நடத்தினார். எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா, ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக கட்சியை வழிநடத்தினார். நடத்தி கொண்டிருக்கிறார். நடத்துவார்'' என கூறினார்.

சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு
முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான எம்பி சிவி சண்முகம் தரப்பு ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அதில் அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான விசாரணையை சிபிஐ அல்லது வேறு அமைப்புக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இம்மனு மீது நேற்று விசாரித்தது. அப்போது வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications