குழம்பிப்போய் இருக்காரு எடப்பாடி.. 21 பேர் மரணத்துக்கு ஈபிஎஸ் தான் காரணம்: மா.சுப்பிரமணியன் விளாசல்!
சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வால் 21 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு தான். இன்றைக்கு நீட் தேர்வை ரத்து செய்ய உண்ணாவிரதம் என்று நாடகமாடுகிறார்கள். மானம், ரோஷம், வெட்கம், சூடு, சுரணை இருக்கிறதா? எனக் கடுமையாக விமர்சித்தார்.

மேலும் நீட் தேர்வால் உயிரிழக்கும் மாணவர்களுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தான் பதில் சொல்ல வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். 2019ல் காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு வந்ததாக சொல்லி இருக்கிறார். 2019ல் ஆட்சியில் இருந்தது நரேந்திர மோடி. தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அதிமுக. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் விலக்கு இருந்தது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தபிறகுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் வந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு வந்ததற்கும், அதனால் 21 மாணவர்கள் உயிர் பலியானதற்கும் எடப்பாடி பழனிசாமிதான் காரணம்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகளில் பெற்ற தரச் சான்றுகளின் எண்ணிக்கையை விட திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் அதிகமாக பெற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் செயல்படுத்திய திட்டங்களில் நான்கில் ஒரு பங்குகூட முன்பு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக செயல்படுத்தவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்குநேர் விவாதிக்கவும் தயாராக உள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications