ஆட்சி பறிபோனதும் "டிஸ்டர்ப்" செய்யும் சசிகலா.. அதிமுகவை பாதுகாக்க எடப்பாடியாரின் பலே திட்டம்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் இனி கட்சியை வலுப்படுத்துவதில் கவனத்தை செலுத்த எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். ஜெயலலிதா காலத்திலிருந்த அதே ராணுவ கட்டுக்கோப்புடன் அடுத்த தேர்தலில் அதிமுக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுக முதல்முறையாக சட்டசபைத் தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக படுதோல்வி அடைந்து கட்சியே காணாமல் போய்விடும் என சிலர் கூறினார்கள். மேலும் தினகரனின் அமமுக வேறு போட்டியிட்டதால் அதிமுக வாக்குகள் கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்தார்கள்.
ஜெயலலிதா என்ற ஒரு ஆளுமைக்குத்தான் இத்தனை நாட்கள் தொண்டர்கள் கட்டுப்பட்டார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இவை அனைத்தையும் தனது அசாத்திய திறமையினால் எடப்பாடி பழனிச்சாமி முறியடித்தார். அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது. இது நிச்சயம் பாராட்டிய வேண்டிய விஷயமாகும்.

அதிமுக
தேர்தலுக்கு முன்னர் அதிமுகவை கைப்பற்ற எத்தனை வழிகளில் போராடிய சசிகலா சரி விட்டு பிடிப்போம் என்ற ரீதியில் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக திடீர் அறிக்கை விடுத்தார். தங்கள் வெற்றிக்கு இடையூறாக சசிகலா இருப்பார் என எடப்பாடியார் எண்ணிய நிலையில் சசிகலாவின் அறிவிப்பு அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

மேற்கு மண்டலங்கள்
இதனால் இந்த தேர்தலில் எப்படியும் வென்றே தீருவோம் என நம்பினார். ஆனால் தற்போது ஆட்சி போய்விட்டது. எனினும் வடக்கு மற்று மேற்கு மண்டலங்களில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியது. ஆட்சிதான் போய்விட்டது, கட்சியையாவது காப்பாற்றி ராணுவ கட்டுக்கோப்புடன் வைத்திருக்க எடப்பாடியார் முடிவு செய்துள்ளார்.

களையறுக்க திட்டம்
இதற்காக அவர் சில களைகளை பறிக்க திட்டமிட்டுள்ளார். அதாவது தற்போது 66 தொகுதிகளில் வென்றவர்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் என சொல்லப்படுகிறது. எனவே அவர்களை கைக்குள் வைத்திருந்து சசிகலாவின் ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து ஓரங்கட்டிவிடலாம் என முடிவு செய்துள்ளார்.

எத்தனையாக பிரியும்
இதன் மூலம் நாளை கட்சி எத்தனையாக பிரியுமோ என்ற அச்சம் தேவையில்லை. மேலும் சிங்கம் மாடு கதை போல ஒற்றுமையாக இருந்தால் சசிகலா உள்ளே நுழைய மாட்டார் என்ற அசராத நம்பிக்கையுடன் அவர் இருக்கிறார். 2023 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டசபைத் தேர்தல் ஆகியவை வருவதற்குள் அதிமுகவை வலுப்படுத்த அவர் விரும்புகிறார்.

அதிமுக
இனி சசிகலா அதிமுகவை கைப்பற்றுவது குறித்து கனவிலும் நினைக்காத அளவிற்கு சுற்றி அவருக்கு கேட் போட்டுவிட்டதால் கட்சியாவது மிஞ்சும் என்பது எடப்பாடியாரின் கணக்கு. இதை அவரது ஆதரவாளர்களும் ஆமோதித்துள்ளார்களாம். எனவே கூடிய விரைவில் களை எடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications