பெண்களுக்கு மாதம் ரூ.3000 வழங்க வலியுறுத்தப்படும்.. அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் பதவி நியமன முறை குறித்து கருத்து கேட்க வேண்டும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் 133 அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 20ஆம் தேதி வெளியிட்டார். அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தனி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது. அதேபோல தேமுதிகவுக்கு விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகள் வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக தேர்தல் அறிக்கையில் 133 அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னை நடத்த வலியுறுத்தப்படும். உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வலியுறுத்தப்படும். மகளிர் உரிமைத்தொகையாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 3000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களை உட்படுத்த வேண்டும். ஆளுநர் பதவி நியமன முறை குறித்து கருத்து கேட்க வலியுறுத்தப்படும் என்பது உள்ளிட்ட 133 பாயிண்டுகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications