கொரோனா பரவலைத் தடுப்பது உங்கள் கையில்தான் இருக்கு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
சென்னை: கொரோனா பரவலைத் தடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் என்ற பிரச்சனையே எழவில்லை.

தமிழகத்தில் வேளாண் பணிகள் முழுமையாக நடைபெறுகிறது. 100 நாள் வேலை திட்டமும் 3-ல் 1 பங்கு பணியாளர்களுடன் செயல்படுகிறது. தமிழகத்தில் ஊரகப் பகுதி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலித்து கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்க ஏற்கனவே உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகள் அதிகம் என்பதால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் குறைந்த மாநிலம் தமிழகம்தான். இந்தியாவிலேயே 53 பரிசோதனை நிலையங்கள் உள்ள மாநிலம் தமிழகம் மட்டுமே. கொரோனா தொற்று ஏறித்தான் இறங்கும் என்பது மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம், இந்தியாவிலும் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு பின்னர் குறைய வாய்ப்புள்ளது.
மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும். கொரோனாவை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது. தனிமனித இடைவெளி,மாஸ்க் அணிதல் போன்றவிதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்; பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications