ஆபிசில் குவிந்த பாஜக தலைகள்.. எடப்பாடி முகத்தில் பூரிப்பு! அந்த ரியாக்சனை பார்த்தா.. டவுட்டா இருக்கே
எடப்பாடி மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தால்.. பாஜகவை எதிர்க்க அவர் ரெடியாகிவிட்டாரோ என்று எண்ண தோன்றுகிறது.
சென்னை: பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்து இருக்கும் ரியாக்சன்தான் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது. அவர் ஒரு முடிவோடுதான் இருக்கிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக - பாஜக இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஐடி விங் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து உள்ளார்.
இவர் அதிமுகவில் இணைந்தது மட்டுமின்றி தன்னுடன் ஒரு அணியையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். நேற்று அண்ணாமலையை விமர்சனம் செய்ததால் திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார்.

என்ன நடக்கிறது?
இந்த தொடர் நிகழ்வுகளில் எல்லாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று பார்த்தால், நிர்மல் குமார், திலீப் கண்ணன் இருவரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டுத்தான் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்து உள்ளனர். அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணன் பின்வரும் பாயிண்டுகளை குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..??
ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார்.
தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார்,.
தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார்... என்பது உள்ளிட்ட புகார்களை வைத்து உள்ளார்.

நிர்மல் புகார்
இன்னொரு பக்கம் நிர்மல் குமார் அடுக்கிய புகார்களில்,
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலையாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? , என்று குறிப்பிட்டு உள்ளார்.

சேர்த்துக்கொண்டார்
இப்படி அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தவர்களை எல்லாம் எடப்பாடி தனது டீமில் சேர்த்துக்கொண்டு உள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டனர், கூட்டணி கட்சி தலைவரை தரைகுறைவாக பேசிவிட்டனர் என்றெல்லாம் கருதாமல் இவர்களை எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் இணைந்துகொண்டார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இவர்களை எல்லாம் சிரித்த முகத்துடன் எடப்பாடி வரவேற்று உள்ளார். பூரிப்பாக எடப்பாடி காட்சி அளிக்க தொடங்கி உள்ளார்.

பூரிப்பு
இதற்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்து இருக்கும் ரியாக்சன்தான் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது. அவர் ஒரு முடிவோடுதான் இருக்கிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது. IT பிரிவு மாநில செயலாளர் திலீப், OBC அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், , திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் குவிந்து எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்வில் எடப்பாடி மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். சொந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் இப்படி தங்கள் பக்கம் வருவதை எடப்பாடி கொண்டாடுவதை பார்த்தால்.. பாஜகவை எதிர்க்க அவர் ரெடியாகிவிட்டாரோ என்று எண்ண தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications