கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா
சென்னை: அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டுள்ளார். இதில், கோயம்புத்தூரில் 6 தொகுதிகளில் உள்ள சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 23 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பெயர் இடம் பெற்றிருந்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் நான்காவது முறையாக எஸ்.பி வேலுமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்
கோவை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் சிட்டிங் எம்எல்ஏ ஏகே செல்வராஜூக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதனால் அங்கும் புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். சூலூர் தொகுதிக்கு சிட்டிங் எம்எல்ஏ கந்தசாமி, சிங்காநல்லூர் தொகுதிக்கு சிட்டிங் எம்எல்ஏ கேஆர் ஜெயராம், கவுண்டம்பாளையம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார், கிணத்துக்கடவு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ தாமோதரன், பொள்ளாச்சி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ ஜெயராமன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அம்மன் அர்ஜூனனுக்கு தெற்கு தொகுதி
கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ள அம்மன் அர்ஜூனனுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ஓகே சின்ராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வால்பாறை (தனி) கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த அதிமுக அம்மா பேரவை பொருளாளர் டி. லட்சுமண சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ ஏகே செல்வராஜூக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. செங்கோட்யைன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய போது, அவரிடம் இருந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை பறித்து, இதே ஏகே செல்வராஜூக்கு தான் வழங்கினார். அவரும் செங்கோட்டையனை எதிர்த்து கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications