எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு, ஆளும்போது வேறு பேச்சு.. இதுதான் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஆசிரியர்கள் போராட்டத்தில் வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கையைக் கூட பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக கைது செய்ததை கண்டிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின சரமாரியாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். போராடிய ஆசிரியர்களிடம் தமிழக அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்து வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தும் போராட்டம் தொடர்ந்தது.

இதனையடுத்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஒரு சில அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார். ஆனால் தமிழக அரசு தங்களுடைய முழுமையான கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கை விடுவோம், அதுவரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதனையடுத்து இன்று காலை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக X சமூக வலைதள பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்த நீங்கள், 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட, நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைது செய்ததையும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்.
100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் திமுக முதல்வர் ஸ்டாலின், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications