ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு தீரவில்லை.. தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகம் இன்னும் சீராகவில்லை என புகார்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ரேஷன் அட்டைதாரர்கள் பலரும் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு 2 கோடி பாமாயில் பாக்கெட்கள், தேவையான துவரம்பருப்பு ஆர்டர் செய்யப்பட்டு, அனைத்தும் நியாயவிலை கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஜூலை மாத முதல் வாரத்துக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்கப்பட்டுவிடும் என அமைச்சர் கூறி இருந்தார். ஜூன் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற இயலாதவர்கள் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டது.
எனினும், பல இடங்களில் இன்னும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஸ்டாக் இல்லை என கூறப்படுகிறது. ஜூன் மாதம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள், இம்மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ள அரசு அனுமதித்தாலும் அதற்கு ஏற்ப முழு அளவில் பொருட்கள் அனுப்பப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் மூன்று மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
சென்ற மாதமே இதுகுறித்து நான் சுட்டிக்காட்டி இருந்த நிலையில், இதுவரை ரேஷன் பொருட்கள் விநியோகத்தை சீர்செய்யத் தவறிய நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ரேஷன் பொருட்களை முறையாக கொள்முதல் செய்து விநியோகிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு, மக்கள் மீது துளியும் அக்கறையற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான ரேஷன் பொருட்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி, அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications