திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்! ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார்! ஆதாரம் இருப்பதாக பேட்டி
சென்னை: 2021 முதல் திமுக ஆட்சியில் நடந்த ரூ.4 லட்சம் கோடி ஊழல்கள் குறித்த பட்டியலை ஆதாரங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு கடன் சுமையில் இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, துறை வாரியாக எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்ற விவரங்களை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதற்கேற்ப திமுக ஆட்சிக்கு எதிரான சம்பவங்களை மக்களிடம் கொண்டு செல்லவும் தயாராகி இருக்கிறது. இந்த நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.

இந்த சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2021 முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்துள்ளோம். இதுதொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளோம். திமுக ஆட்சியில் தமிழ்நாடு கடன் சுமையில் இருக்கிறது. கடந்த 56 மாதங்களில், ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது.
இதுதான் திமுகவின் சாதனை. ஊழலை தவிர திமுக எந்த நன்மையையும் செய்யவில்லை. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக் கூடிய கட்சி திமுக. துறை வாரியாக நடந்த ஊழல்களை கொடுத்துள்ளோம். நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.64 ஆயிரம் கோடி, ஊரக வளர்ச்சித்துறையில் ரூ.60 ஆயிரம் கோடி, கனிமவளத்துறையில் ரூ.60 ஆயிரம் கோடி, எரிசக்தி துறையில் ரூ.55 ஆயிரம் கோடி, டாஸ்மாக்கில் ரூ.50 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர்.
பத்திரப்பதிவுத் துறையில் ரூ.20 ஆயிரம் கோடியும், நெடுஞ்சாலைத் துறையில் ரூ.20 கோடியும், தொழில்துறையில் ரூ.8 ஆயிரம் கோடியும், பள்ளிக்கல்வி, வேளாண்மை மற்றும் சுகாதாரத்துறையில் தலா ரூ.5 ஆயிரம் கோடியும், சமூகநலத்துறையில் ரூ.4 ஆயிரம் கோடியும், இந்துசமய நலத்துறையில் ரூ.ஆயிரம் கோடியும், விளையாட்டுத்துறையில் ரூ.500 கோடி, சுற்றுலாத்துறை மற்றும் பால்வளத்துறையில் ரூ.250 கோடி ஊழல் செய்துள்ளனர்.
மொத்தமாக ரூ.4 லட்சம் கோடி திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனின் விசாரணை நடக்க வேண்டும். அதேபோல் மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தை முன் கூட்டியே செயல்படுத்தி இருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக லேப்டாப் கொடுத்ததை வரவேற்கிறோம்.
ஆனால் தேர்தலுக்கு முன் வாக்குகளுக்காக லேப்டாப்பை மாணவர்களுக்கு கொடுக்கிறார்கள். கல்லூரி திறந்தவுடன் லேப்டாப் கொடுத்திருக்க வேண்டும். அப்போதும் செய்யவில்லை.. தற்போது கொடுக்கப்பட்டுள்ள லேப்டாப்பால் என்ன பயன்? திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகவே பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications