அதிமுகவையும் மிரட்டியுள்ளது பாஜக.. கேள்வி கேட்க துப்பு இல்ல: எடப்பாடியை வறுத்தெடுத்த மா.சுப்ரமணியன்!
சென்னை: அதிமுகவையும் பாஜக மிரட்டி உள்ளது என்றும், மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் எழுப்ப துப்பு இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி என்றும் கோபமாகச் சீறியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை ரெய்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமலாக்கத்துறையின் நடவடிக்கையை ஆதரித்து கருத்து தெரிவித்தார்.
மேலும், செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் தார்மீக பொறுப்பேற்று அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

ஈபிஎஸ்ஸை விளாசிய அமைச்சர்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் ஒரு பிடி பிடித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "அமலாக்கத்துறையினர் தங்கள் எஜமானர்களான மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை திருப்திபடுத்தி உள்ளனர். மத்திய பாஜக ஆட்சியின் தோல்விகளை மறைக்க நடத்தும் நாடகம் தான் கைது நடவடிக்கை. தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போட்டு, அவர்களின் செயல்பாடுகளை முடக்க பாஜக முயற்சிக்கிறது. செந்தில் பாலாஜியின் கைது என்பது ஜனநாயகப் படுகொலை.

அதிமுகவையும் மிரட்டுகிறது பாஜக: திமுக மட்டுமின்றி அதிமுகவையும் மிரட்ட அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது. கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறியதால் உங்களையும் கைது செய்வோம் என்று அதிமுகவினரையும் பாஜக மிரட்டி உள்ளது. எந்த மிரட்டலுக்கும் பயப்படாத இயக்கம் திமுக. ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் ரெய்டு வந்தபோதும் திமுகதான் எதிர்த்து குரல் கொடுத்தது.
செந்தில் பாலாஜி கைது குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை. செந்தில் பாலாஜி பற்றி பேச தனக்கு என்ன தகுதி உள்ளது என்று நிலைக்கண்ணாடி முன்பு நின்று எடப்பாடி பழனிசாமி தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீதுள்ள வழக்குகள் பற்றி ஒருமுறை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அறிவு இல்லை: 2016ஆம் ஆண்டு தலைமை செயலகத்தில் தலைமை செயலர் ராம்மோகன் ராவ் அறையில் ஐடி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் நடந்த ரெய்டுக்கும் வித்தியாசம் இருப்பதை உணரும் அறிவு எடப்பாடிக்கு இல்லை. 2016ல் அதிமுக பாஜகவுக்கு எதிர்க்கட்சி இல்லை. ஆனால், இப்போது நடந்திருக்கும் ரெய்டு எதிர்க்கட்சி மீதான பழிவாங்கும் நடவடிக்கை.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்துவதை கண்டித்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் எழுப்ப துப்பு இல்லாத எடப்பாடி பழனிசாமி எப்படி மாநில உரிமைகளை காப்பாற்றுவார். அடிமை அதிமுக கூட்டத்திற்கும் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. திமுக ஆட்சி மீது குற்றம்சாட்ட ஏதும் இல்லாததால் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையை காரணமாக்கி களங்கம் கற்பிக்க முயற்சிக்கின்றனர்." என கடுமையாக விமர்சித்தார் மா.சுப்பிரமணியன்.












Click it and Unblock the Notifications