அதிமுக மா.செக்கள் கூட்டத்தை தள்ளி வைத்து அவசரமாக செயற்குழு கூட்டம் நடத்தும் எடப்பாடி.. என்ன மேட்டர்?
சென்னை: அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வரும் 9 ஆம் தேதி நடைபெற இருந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து பல கட்டங்களாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நாளை மறுநாள், அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இந்த மா.செக்கள் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.
அதேசமயம், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் பற்றிய அறிவிப்பு தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை கழக எம்.ஜி.ஆர் மாளிகையில் அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

எனவே அதிமுக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு அதிமுக இணைவு குறித்த பேச்சுகள் தீவிரமாக எழுந்த நிலையில், இந்த அவசர செயற்குழு கூட்டம் கூட்டப்படுவது எதிர்பார்ப்புகளைக் கிளப்பி உள்ளது. 2026 சட்டசபை தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும், தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது தொடர்பாகவும், செயற்குழுவில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications