1+1 திட்டம்.. பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வைக்கும் முக்கிய கோரிக்கை இதுதானா.. இதெல்லாம் சாத்தியமா?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வரும் நிலையில் அவரை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது கர்நாடாகாவில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் கேட்கலாம் என்று ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளாதாக கட்சியின் முக்கிய புள்ளிகள் தெரிவிக்கின்றன. ஏன் கர்நாடகாவில் அதிமுக போட்டியிடுகிறது? அதன் பின்னாள் இருக்கும் காரணங்களை என்ன? என்பது குறித்து விவரமறிந்தவர்கள் சில தகவல்களை கூறியுள்ளனர்.
இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகை தரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையக் கட்டடத்தின் முதல் பகுதியை திறந்து வைக்கிறார். அதேபோல சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கிறார். அதேபோல ரூ.294 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான அகல ரயில் சேவை மற்றும் தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகள் மற்றும் பாஜக தலைவர்கள் என பலரும் பங்கேற்கின்றனர். அதேபோல இந்நிகழ்ச்சிக்கு வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் நேரம் ஒதுக்கப்படாத நிலையில், தற்போது வழியனுப்பி வைக்கும்போது சந்திக்க 15 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 15 நிமிடத்தில் பல விஷயங்களை பேச எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தாலும், முக்கியமாக கர்நாடக தேர்தலில் போட்டி என்கிற கோரிக்கையை வைக்க இருக்கிறாராம்.
கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, புதிய பொதுச்செயலாளராக பல தடைகளை கடந்து வந்துள்ள எடப்பாடி தனது செல்வாக்கை நிரூக்கவும் கர்நாடகாவில் கட்சியின் பிரமுகர்களை போட்டியிட வைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல தற்போது நடைபெற உள்ள தேர்தலில் கர்நாடகாவில் பாஜக வெற்றி பெருவதில் கடும் சிக்கல் நீடித்து வருவதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. எனவே பாஜகவுக்கு கூடுதல் ஆதரவு தேவை என்பதை கட்சி மேலிடம் உணர்ந்திருக்கிறது.
இந்த ஆதரவு பெரிய அளவில் இருந்தாலும், சிறிய அளவில் இருந்தாலும் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது. எனவே அதிமுகவிடம் ஆதரவு கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் கோலார், கோலார் தங்கவயல், பெங்களூர் நகரில் காந்தி நகர், சாம்ராஜ்பேட்டை, சிவாஜிநகர், ராஜராஜேஸ்வரி நகர், சிவி ராமன் நகர், மகாதேவபுரா போன்ற தொகுதிகளில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த ஆதரவு பாஜகவுக்கு ப்ளாஸாக அமையும். எனவேதான் பாஜக அதிமுகவின் ஆதரவையும் நாடியுள்ளது.
இந்த ஆதரவைதான் தனக்காக 'சீட்டுகளாக' மாற்ற ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இப்படி பல காரணங்கள் இருந்தாலும் அங்கு அதிமுக பிரமுகர்கள் போட்டியிட ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. கட்சியின் சின்னம்தான் அந்த முக்கிய காரணம். என்னதான் எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமாக பொதுச்செயலாளராக தேர்வாகியிருந்தாலும் இந்த மாற்றங்களை இன்னும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இந்த கார்நாடக தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் இரட்டை இலை சின்னத்தை நம் வசம் வாங்க பாஜகவிடம் உதவி கேட்கலாம் என்று ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான முதற்கட்ட பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்த அமித்ஷா-தம்பிதுரை சந்திப்பின்போதே நடந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் பி்ரதமரிடம் சீட் குறித்து ஒரு வார்த்தை சொல்லி வைத்தால்தான் வேலை சீக்கிரம் முடியும் என்பதால்தான் ஈபிஎஸ் இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கெனவே கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கும் நிலையில் சீட் கேட்டு எம்எல்ஏக்களை பெற்றுவிடாலம், அதேபோல இலை சின்னத்தையும் கைப்பற்றிவிட முடியும் என 1+1 திட்டத்தை எடப்பாடியார் தீட்டியிருக்கிறார். ஆனால் பிரதமர் என்ன சொல்கிறார் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications