மயிலாடுதுறை இரட்டைக் கொலை! காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா? எடப்பாடி அட்டாக்
சென்னை: மயிலாடுதுறையில் சாராய விற்பனை குறித்து புகார் அளித்ததால் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முன் விரோதம் காரணமாகவே கொலை நடந்துள்ளதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா? என தமிழக எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராஜ்குமார், மூவேந்தன், தங்க துரை ஆகிய மூன்று பேரும் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது ராஜ்குமார் உள்ளிட்ட சிலர் அந்த சிறுவனை தாக்கி உள்ளனர். இந்த நிலையில் ஏன் சிறுவனை தாக்கினீர்கள் என சக்தி, ஹரிஷ் ஆகியோர் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஊர் பொதுமக்கள் சமாதானம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் ஹரீஷ், சக்தி ஆகிய இளைஞர்களின் வீட்டுக்குச் சென்று வீட்டை சூறையாடியதோடு அவர்களை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளைஞர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறையில் இருவரும் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு காரணம் சாராய விற்பனை அல்ல என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஒரே தெருவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு தான் கொலை சம்பவத்திற்கு காரணம் எனவும், தினேஷ், மூவேந்தர் ஆகியோர் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. மது விற்பனை தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் சம்பவம் நடந்ததாக கூறுவது தவறு, கொலை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் என போலிசார் கூறியுள்ளார்.
இந்நிலையில், வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா? என தமிழக எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை. திரு. ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?
இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா? இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications