முத்துராமலிங்க தேவர் குருபூஜை! எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வது உறுதி! -அதிமுக தலைமைக்கழகம்
சென்னை: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் செல்வதை அதிமுக தலைமைக்கழகம் உறுதி செய்துள்ளது.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி இந்தாண்டு பசும்பொன் செல்லும் தகவலை ஒன் இந்தியா தமிழ் தான் முந்திச் சொன்னது. கடந்த 18ஆம் தேதியன்று ''முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி! கிளைச் செயலாளர் விடுத்த அழைப்பு!'' என்ற தலைப்பில் இதனை தனிச் செய்தியாகவே வெளியிட்டிருந்தோம்.

இதனிடையே இன்று அதிமுக தலைமைக்கழகமும் ஒன் இந்தியா கூறிய தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;
பல்வேறு சிறப்புகளுக்குரிய உன்னத தலைவரான தேவர் திருமகனாரின் 116-ஆவது பிறந்த நாள் மற்றும் 61-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, 30.10.2023 - திங்கட்கிழமை காலை 10 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக வருகை தந்து தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications