அதிமுக மாநாடு வெற்றிதான்.. பாஜகவுக்கு 2 விஷயத்தை எடப்பாடி சொல்லிவிட்டார்.. தெளிவாக விளக்கும் ப்ரியன்
சென்னை: மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு எடப்பாடிக்கு வெற்றிதான் என்றும் அவர் கூட்டணி விஷயத்தில் பாஜகவுக்கு இரண்டு விஷயங்களை தெளிவாக சொல்லிவிட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை என அதிமுகவும் பாஜகவும் அவ்வப்போது கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கூட்டணிக்குள் அவ்வப்போது இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

மறுபக்கம், அதிமுக மதுரையில் மாநில மாநாடு நடத்தி தனது பலத்தை காட்டியது. இந்த நிலையில் தான் மதுரை மாநாடு மூலமாக பாஜகவிற்கு இரண்டு விஷயத்தை எடப்பாடி தெளிவாக சொல்லிவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். இது குறித்து ப்ரியன் கூறியதாவது:- அதிமுக மாநாட்டை பொறுத்தவரை எடப்பாடிக்கு வெற்றியான ஒரு விஷயமாகத்தான் பார்க்கிறேன். ஏனெனில் இரண்டு விஷயத்தை பாஜகவுக்கு சொல்லியிருக்கிறார்.
அந்த இரண்டு விஷயத்தை செய்வதற்கு ஏற்றார் போல் கூட்டத்தை சேர்த்துவிட்டார். மாநாடு திராவிட இயக்க மாநாடு எப்படி நடந்தது என்பதை போல நடந்ததா என்பது கேள்விக் குறியாக உள்ளது. பொழுது போக்கு மாநாடு போல ஆகிவிட்டது. ஆனாலும் கூட்டத்தை சேர்த்தது மூலமாக தமிழ்நாட்டில் கூட்டணியில் நாங்கள்தான் பெரிய கட்சி என்பதை பாஜகவுக்கு சொல்ல வருகிறார்.
நாங்கள்தான் இங்கே சீட் ஒதுக்குவோம் என்பது ஒரு பாயிண்ட். இன்னொரு பாயிண்ட் என்னவென்றால், தென் மண்டலங்களில் டிடிவியை சேர்க்க வேண்டும்.. ஓபிஎஸ்சை சேர்க்க வேண்டும் அல்லது அவருக்கு ஆதரவாக பேசும் விஷயங்கள் இதையெல்லாம் விட்டு விடுங்கள் என்பது போன்ற விஷயங்களை பாஜகவுக்கு சொல்ல பார்த்தார். மாநாடு மூலமாக இரண்டு விஷயத்தை சொல்லியிருக்கிறார் என்பதுதான் எனது பாயிண்ட்.
பாஜகவை பொறுத்தவரை நடைபயணம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்பதுதான் எனது கருத்து. எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது மாதிரி தெரியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அண்ணாமலையின் செய்தியை போட வேண்டிய கட்டாயத்தில் ஊடகங்கள் உள்ளன. ஸ்பான்சர் பண்ணி பல செய்திகளை கொண்டு வருகிறார்கள்.
கூட்டப்பட்ட கூட்டமாகத்தான் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். அதனால் பெரிய எழுச்சியை கொடுக்கவில்லை என்பதுதான் எனது கருத்து. எடப்பாடி கூட்டத்தை கூட்டிவிட்டதாக சொல்லப்படும் அதே நேரத்தில் அவருக்கு தென் மண்டலத்தில் ஆதரவு பெருகியிருக்கிறதா என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. கூட்டம் வந்தது உண்மைதான். ஆனால் தென்மண்டலத்தில் அவருக்கு ஓட்டு போடுவார்களா என்பது இன்னும் கேள்விக்குறியான விஷயம்தான்.
டெல்டாவில் கூட சில தொகுதிகளில் ஓட்டுபோடுவார்களா என்பதை சந்தேகமாகத்தான் பார்க்கிறேன். அதேநேரத்தில் அண்ணாமலையின் பயணம், பாஜகவுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தவில்லை என்பதே எனது கருத்து. ஏனெனில் இதே சமயத்தில் மோடிக்கு எதிரான பல்வேறு விஷயங்கள்.. மத்திய அரசுக்கு எதிரான பல்வேறு விஷயங்கள் திமுக தரப்பில் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அவர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாக உள்ளது. திமுகவின் ரீச் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை சொல்வது மட்டுமே எடுபடவில்லை. அண்ணாமலையும் அதிமுகவும் கூட்டணியில் இருந்து ஜெல் ஆகி, இரண்டு பேருமே ஒரே விஷயத்தை முன்வைத்தால் அழுத்தி பேசினால் எதிர்ப்பு கொஞ்சம் ஒருங்கிணைக்கப்படும்.
ஆனால், இங்கே வந்து அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் இடையே கூட்டணி ஜெல் ஆகாத நிலையே உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் பாஜக ஆஹா. .ஓஹோ என சொன்னாலும் கூட ஓட்டு போடும் மக்களிடம் போய் சேரவில்லை என்பதுதான் எனது கருத்து. இவ்வாறு ப்ரியன் கூறினார்.












Click it and Unblock the Notifications