"படிப்பு மட்டுமே உங்களிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து!" முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அட்வைஸ்
சென்னை: 'சிற்பி' திட்ட நிறைவு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், மாணவர்கள் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்று அறிவுரை வழங்கினார்.
சென்னையில் போலீசார் சார்பில் 'சிற்பி' என்ற புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருப்பதைத் தடுக்கவே இந்தத் திட்டத்தைச் சென்னை போலீசார் முன்மொழிந்தனர்.

சிறார் குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களைத் தவிர்க்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையே இத்திட்டத்தின் நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.. தரமான கல்வி வழங்குவதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம் எல்லா துறைகளிலும் முதலிடத்திற்கு முன்னேறுகிறது.. பள்ளிப் படிப்புடன் நிற்காமல் அனைவரும் கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும்.. படிப்பு மட்டுமே உங்களிடம் இருந்து பிரிக்க முடியாது சொத்து" என்று தெரிவித்தார்.
மாணவர்களுக்குக் கல்விக்கு இணையாக ஒழுக்கம் முக்கியம் எனத் தெரிவித்த அவர், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், போதை பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகக் கூடாது என்று குறிப்பிட்ட அவர் இது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் நண்பர்களையும் இதுபோன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் நன்கு படிக்க வேண்டும் என்றும் மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், காலை சிற்றுண்டி திட்டம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications