பொதுத்தேர்வு எழுத வராத 50674 மாணவர்கள்..பயத்தை கைவிடுங்கள்..அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வராத காரணம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை: தேர்வை பார்த்தாலே பயம்..வினாத்தாளை பார்த்தாலே ஒருவித பதற்றம் என பல மாணவர்கள் ஒருவித உளவியல் சிக்கலில் தவித்து வருகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வினை எழுத வராமல் 50674 மாணவர்கள் தவிர்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. மாணவர்கள் தேர்வு எழுத வராத காரண என்ன என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா என்ற கொடிய அரக்கனால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். இரண்டு ஆண்டுகள் வரை பள்ளிக்கே செல்லாமல் ஆன்லைன் மூலமே கற்றுக்கொண்டனர். தேர்வுகள் எழுதாமலேயே ஆல்பாஸ் போடப்பட்டதால் பல மாணவர்கள் படிப்பதையே நிறுத்தி விட்டனர்.
கொரோனா பற்றிய அச்சம் நீங்கி கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் இயல்பாக செயல்படத் தொடங்கினாலும் பல மாணவர்களின் படிக்கும் வழக்கம் மாறி விட்டது. பக்கம் பக்கமாக படித்து மனப்பாடம் செய்து எழுத வேண்டுமா என்று ஒருசில மாணவர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர். இதன் காரணமாகவே பல மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதை நிறுத்தி விட்டனர்.

தேர்வை தவிர்க்கும் மாணவர்கள்
கடந்த 2022ஆம் நடைபெற்ற 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதான அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராததற்கு காரணமாக முன்வைக்கப்பட்டன.

ஆப்செண்ட் ஆக காரணம்
அந்த வகையில் கடந்த ஆண்டு 6 லட்சம் பேர் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது அரசு தேர்வுகள் துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்தது. பொதுத்தேர்வில் இத்தனை லட்சம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் ஆப்செண்ட் ஆனதற்கான காரணம் குறித்து ஆராயப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

50ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட்
இந்த ஆண்டு கொரோனா பதற்றம் முடிவுக்குவந்தாலும் புதுவிதமான காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலுக்கும், அம்மை போன்ற நோய்களுக்கும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். சில மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது குறித்த அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே இந்த ஆண்டும் தமிழ், ஆங்கிலம் மொழித்தேர்வுகளை 50,674 பேர் தேர்வை புறக்கணித்துள்ளனர்.

மொழி பாடத்தை தவிர்த்த மாணவர்கள்
50ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் ஆப்செண்ட் ஆனது மிகத் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. தமிழ் மொழி, ஆங்கில மொழி பாடத்திற்கே இந்த நிலை என்றால் இன்னும் கணக்கு, அறிவியல், உள்ளிட்ட பாடங்களின் தேர்வில் எத்தனை பேர் ஆப்செண்ட் ஆகப் போகிறார்களோ என்ற பதைபதைப்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

ஜூன் மாதம் வாய்ப்பு
மொழித்தாள் தேர்வுக்கு வராத மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் மூலம் கண்டறிந்து, அடுத்து வரும் பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளில் பங்கேற்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் எனவும் ஜூன் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

காரணங்கள் என்ன?
மாணவ மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்தியதற்கு பல்வேறு காரணங்களை கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிராமப் புறங்களில் கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பலர் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் வாரம் சில ஆயிரம் பணம் கிடைத்ததால், பலர் போதைக்கு அடிமையாகி விட்டனர். இவர்களில் பலர் பள்ளிக்கு வராமல் நின்று விட்டனர். இதன் காரணமாக தேர்வெழுத வராமல் இருந்திருக்கக் கூடும். அதே போல 50,000 க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதாமல் போனதற்கு குழந்தைத் திருமணங்கள் முக்கியக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

ப்ளஸ் 1 பொதுத்தேர்வு
ப்ளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தேர்வெழுதும் வாய்ப்பு இருந்தாலும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஏன் எழுத வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவுகள் காரணமாக பல மாணவர்கள் தேர்வு எழுத வராமல் தவிர்த்து விட்டனர்.

ஆல்பாஸ் மாணவர்கள்
தற்போது 12ஆம் வகுப்பு படிப்பவர்கள் கொரோனா காலத்தில் 9, 10ஆம் வகுப்புகளில் ஆல் பாஸ் செய்யப்பட்டவர்கள். பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் படிப்பதற்கு கடினமாக இருந்ததாக பல மாணவர்கள் கவலைத் தெரிவித்தனர். இதனால் பல எளிய பின்னணி கொண்ட மாணவர்கள், மனதளவில் கல்வியைத் தொடர்வதற்கு விரும்பவில்லை.

அன்பில் மகேஷ் ஆலோசனை
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். மாணவர்கள் தேர்வு எழுத வராத காரணம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. தேர்வு நாளன்றே மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் சென்று சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் அச்சத்தை ஆசிரியர்களும், பெற்றோர்களும் போக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

பயம்,பதற்றம்
இந்த நிலையில் ஆலோசனை கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்வு பயம் காரணமாகவா? அல்லது வேறு என்ன காரணத்திற்காக மாணவர்கள் பள்ளிக்கு வராமல் தவிர்த்து விட்டனரா என்று கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக கூறினார். 2019ஆம் ஆண்டு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதாமல் தவிர்த்துள்ளனர். அப்போது கொரோனா எதுவும் வரவில்லை. மாணவர்கள் ஆல்பாஸ் மனநிலையிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாகவே தேர்வு எழுதுவதை தவிர்த்து விட்டனர் என்று கூறினார். காய்ச்சல் பரவல் இருந்தாலும் தமிழ்நாட்டில் விடுமுறை விட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும்
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிள்ளைகளை தேர்வு எழுத அனுப்புங்கள் என கோரிக்கை விடுத்தார். பெற்றோர்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே மாணவர்கள் படிக்க முடியும். தேர்வு எழுதாத நாளன்றே பெற்றோர்களை ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை அழைக்க வரும் போது ஒத்துழைக்க வேண்டும் என்றும் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications