சென்னை பூங்கா, கோட்டை ரயில் நிலையங்களில் நடைமேடைகள் இடிப்பு.. தண்டவாளம் அகற்றம்.. விறுவிறு
சென்னை: சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே 4வது பாதைக்கான ஆரம்ப கட்ட பணிகள் கோட்டை, பூங்கா நகர் ஆகிய ரயில் நிலையங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பூங்கா நகர் மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் நடைமேடைகள், நடைமேம்பாலம் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே தற்போது 3 பாதைகள் தான் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கூடுதல் பாதை இல்லாத காரணத்தால், வட மாநிலங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4வது பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 4வது பாதை அமைக்க வேண்டும் என்றால், பூங்கா மற்றும் கடற்கரை இடையே உள்ள பறக்கும் ரயில் நடைமேடைகள், தண்டவாளங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்படி இடித்து அகற்றினால் தான் புதிய ரயில்பாதை அமைக்க முடியும் என்கிற காரணத்தால்,வேளச்சேரி சென்னை கடற்கரை ரயில் சேவை, சிந்தாதிரிப்பேட்டை வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டது.தற்போது சென்னை சிந்தாதிரிப்பேட்டை வேளச்சேரி இடையே தான் பறக்கும் ரயில்கள் இயங்கி வருகின்றன.
இது ஒருபுறம் எனில் சென்னை எழும்பூர்-கடற்கரை வரை 4-வது பாதை அமைக்கும் கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ரூ.280 கோடி மதிப்பில் 4-வது புதிய பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, நடப்பு பட்ஜெட்டிலும் ரூ.96.70கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இத்திட்டத்தை வரும் மார்ச் மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது.
அதன்படியே பூங்காநகர் மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் பழைய தண்டவாளங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எழும்பூர்-கடற்கரை 4-வது பாதை அமைப்பதற்காக ஆரம்பக்கட்டபணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது சென்டின கோட்டை, பூங்கா நகர் ஆகிய ரயில் நிலையங்களில் பறக்கும் வழித்தடத்தில் உள்ள ரயில் தண்டவாளம் அகற்றப்பட்டுள்ளது. 2 ரயில் நிலையங்களில் நடைமேடை சுவர் இடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது, கோட்டை ரயில்நிலையத்தில் 3,4,5-வது நடைமேடைகள் மற்றும் நடைமேம்பாலம் அகற்றும் பணியும், பூங்கா நகர் நிலையத்தில் கட்டிடம் அகற்றும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.
இது ஒருபுறம் எனில் கூவம் ஆற்றை ஒட்டி, பூமிக்கடியில் கம்பிகள் மூலமாக அடித்தளம் அமைக்கும் பணியும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்தபிறகு, தண்டவாளம் அமைக்கும் பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும்.
எழும்பூர்-கடற்கரை 4-வது பாதை திட்டப் பணியை 7 மாதங்களில் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள். 4-வது பாதை அமைந்தால், வட மாநிலங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்கமுடியும். இதேபோல் பறக்கும் ரயில்களும் வழக்கம்போல் கடற்கரை வரை இயக்கப்படும். ஆனால் இதற்கு எப்படி அடுத்த ஆண்டு ஜூன் வரை காத்திருக்க வேண்டியது வரலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications