முதிய தம்பதி கொலை..வீட்டில் கூட பாதுகாப்பில்லாத சூழல்! இதுவும் திராவிட மாடல் சாதனையா? சீமான் சீற்றம்
சென்னை: ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளங்காட்டு வலசு பகுதியில் மேக்கரயான் தோட்டத்தில் ராமசாமி என்ற விவசாயியும் அவரது மனைவி பாக்கியம்மாளும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மகன் வெளியூரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மகன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையத்து ராமசாமியின் மகன் அருகில் இருந்தவரை அழைத்து தனது பெற்றோரை பார்க்கும்படி கூறியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும் பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பாக்கியம்மாள் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மாயமானதாக கூறப்படுகிறது. வீட்டில் இருக்கும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை கொலையாளிகள் பிடிபடாத நிலையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது.
இந்த நிலையில் வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச்சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த இணையர்களான ராமசாமி - பாக்கியம்மாள் இருவரும் நகைக் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது
பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. நான்காண்டு கால திமுக ஆட்சியில் வெளியில் மட்டுமல்ல வீட்டிற்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலை செய்யப்படுகின்றனர்.
மருத்துவர்கள் மீது மருத்துவமனை வளாகத்திலேயே கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. வளக் கொள்ளைகளுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்கள் நட்டநடு சாலையில் வைத்து வெட்டி சாய்க்கப்படுகின்றனர். உயிருக்கு ஆபத்து உள்ளது என்று காவல்துறையில் புகாரளித்தாலும் கொல்லப்படும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் வழக்கமாக உள்ளது.
தனிப்பட்ட கொலை, முன்விரோத கொலை, குடும்பக் கொலை, குடிபோதை கொலை, எங்கோ ஓரிடத்தில் கொலை என்று படுகொலைகளை வகை பிரித்து பாகுபடுத்தி, சட்டம்-ஒழுங்கு சீரழிவை நியாயப்படுத்தும் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களே, நீங்கள் கூறிய எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இதுதானா? குடும்பங்களாகக் குறிவைத்து கொலைகள் நடைபெறுகிறது.
ஒரே பகுதியில் அடுத்தடுத்து பலமுறை கொலைகள் நடைபெறுகிறது. ஆனாலும் கொலைகளைத் தடுக்க முடியவில்லை, கொலையாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்றால் தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று உண்மையில் செயல்படுகிறதா? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? இவையும் திராவிட மாடலின் சாதனைகளில் வருகிறதா? என்ற அடுக்கடுக்கான கேள்வி எழுகிறது.
ஆகவே, திமுக அரசு மீதமுள்ள ஓராண்டிற்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்தி மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற கொடூர படுகொலைகள் தொடரா வண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். உயிரிழந்த முதியவர்களின் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications