ஓட்டுப்போட வாங்க மக்கா.. செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி 'காம்போ' அடுத்த ஹிட் ரெடி!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள் தவறாமல் ஓட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி இணைந்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மெஜாரிட்டி இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று திமுகவும், எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று அதிமுகவும் மல்லுக்கட்டி வருகின்றன.
அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக, திமுக, அதிமுக தலைவர்களின் தேர்தல் பிரசாரங்களில் அனல் வீசுகிறது.
இவ்வளவு அனல், வெப்பம் எல்லாம் இருந்தாலும், மக்கள் ஓட்டு போட்டால் தானே மதிப்பு. அது இல்லையெனில், தலைகீழாக நின்றாலும் ஜெயிக்க முடியாது. எனவே, மக்கள் தவறாமல் ஓட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
'சூப்பர் சிங்கர்' புகழ் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதி இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். மக்கள் இசைக் கலைஞர்களான இவர்களின் பாடல்களுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அது போல் இந்த தேர்தல் விழிப்புணர்வு பாடலும் பெரும் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"ஓட்டுப்போட வாங்க மக்கா - நாடு மேலும் வளர வாங்க மக்கா" என்று தொடங்கும் இப்பாடல், ரம்மியமான கிராமத்து வயல்வெளிப் பின்னணியில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுப் போட வர்றோம் மக்கா!












Click it and Unblock the Notifications