Election Exclusive: 12 எங்க இருக்கு... 4 எங்க இருக்கு! ஸ்டாலினிடம் கொட்டி தீர்த்த வைகோ! ஒரே வார்த்தையில் முடித்த திமுக!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியை இறுதி செய்யும் முடிவில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். தேமுதிக கூட்டணிக்கு வந்திருப்பதால் விசிக, மதிமுக கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், 12 தொகுதிகளை மதிமுக கேட்ட நிலையில், 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கு முடியும் என திமுக தலைமை திட்டவட்டமாக கூறிவிட்டதால் அதிருப்தியில் உள்ளது மதிமுக என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். மேலும் ராஜ்யசபா சீட் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் திமுக ஒரே வார்த்தையில் முடித்துவிட்டதாம்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுக 12 தொகுதிகளையும், கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களில் கூட்டணிக்குள் தங்கள் கட்சியின் நிலை மற்றும் வாக்கு செல்வாக்கை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக சொல்கின்றனர்.
ஆனால் திமுக தலைமையோ இந்த கோரிக்கையை ஏற்க இயலாது எனத் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருந்தால் 4 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என கூறிவிட்டதாம்.

2026 சட்டமன்ற தேர்தல்
மேலும், வேறு சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்தால் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து எந்தவிதமான பேச்சுக்கும் இடமில்லை எனவும் திமுக தரப்பு தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது தங்கள் கட்சியின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், கூட்டணிக் கட்டமைப்பை கருத்தில் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
திமுக மதிமுக
அந்த தேர்தலில் மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றது. இதனால், கூட்டணிக்குள் தங்களுக்கு உரிய அளவில் தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்த முறை அதிகமாக இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. 2024 மக்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது கட்சியின் சின்னம் கிடைக்காத சூழலில் மாற்றுச் சின்னத்தில் போட்டியிட்டும் வெற்றி பெற்றது மதிமுகவின் கூட்டணிச் செல்வாக்கை வெளிப்படுத்தியது என்ற கருத்து கட்சிக்குள் நிலவுகிறது.
வைகோ ஸ்டாலின் சந்திப்பு
இந்நிலையில், சமீபத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த வைகோ, தொகுதி பங்கீடு குறித்த தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் திமுக தலைமையோ தங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக்குள் புதிதாக சில கட்சிகள் இணைந்துள்ளதாலும், தொகுதிகள் குறைவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் விளக்கம் அளிக்கின்றன.
தொகுதி பங்கீடு
குறிப்பாக கூட்டணியை விரிவுபடுத்தும் முயற்சியின் காரணமாக ஒவ்வொரு கட்சிக்கும் வழங்கப்படும் தொகுதிகளில் மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டதாக கூறப்படுகிறது. மதிமுக தரப்பில், குறைந்த தொகுதி ஒதுக்கீடு கட்சியின் அமைப்பாற்றலுக்கும் எதிர்கால அரசியல் நிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை நிலவுகிறது.
கூட்டணி அரசியல்
அதேவேளை, கூட்டணியில் தொடர வேண்டுமா அல்லது பேச்சுவார்த்தை மூலம் கூடுதல் தொகுதிகள் பெற முயற்சி செய்ய வேண்டுமா என்ற விவாதமும் கட்சிக்குள் நடைபெற்று வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணிதம் மிக நுணுக்கமான கட்டத்துக்குள் சென்றுள்ள நிலையில், மதிமுக - திமுக இடையிலான இந்த கருத்து வேறுபாடு இறுதியில் எவ்வாறு தீர்க்கப்படும் என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. கூட்டணியின் ஒற்றுமை நிலைத் தெளிவாகும் வரை தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications