Election Exclusive: அவ்வளவுதான் பழக்கவழக்கமா? ரொம்ப ஹர்ட் ஆகுது சாரே! மீண்டும் திமுக - அதிமுக கதவை தட்டும் அய்யா ராமதாஸ்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் காரணமாக முழுமையாக அன்புமணி ராமதாஸின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. இந்த நிலையில் அய்யா பாமக என்ற புதிய கட்சியை தனது ஆதரவாளர்கள் மூலம் தொடங்க இருக்கிறார் ராமதாஸ். திமுக அதிமுக தாவீகா என யாருமே ராமதாசை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாத நிலையில் மீண்டும் ஒருமுறை கேட்டுப் பார்ப்போம் என திமுக அதிமுகவிடம் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட மோதல், தற்போது முழு அரசியல் பிளவாக மாறி தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக கட்சியின் முகமாக இருந்த டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் இருந்து வந்தது.
இந்த நிலையில், தற்போது அந்த மோதல் வெளிப்படையாகி கட்சியே இரண்டாகப் பிரிந்துள்ள சூழல் உருவாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தற்போதைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸ் தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

பாமக உட்கட்சி மோதல்
இதனால் கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகிய அனைத்திலும் அவருக்கே உரிமை உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் இதே நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. ஆனால் இதனை டாக்டர் ராமதாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. "நான் தான் பாமக நிறுவனர். கட்சியின் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் எனக்கே உண்டு" என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இதனால் பாமகவுக்குள் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
அன்புமணி ராமதாஸ்
இந்தச் சூழ்நிலையில், அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி சேர்ந்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தரப்பில் அன்புமணிக்கு 15 முதல் 20 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அன்புமணி தரப்புக்கு அரசியல் ரீதியாக பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
அய்யா பாட்டாளி மக்கள் கட்சி
இதன் தொடர்ச்சியாக, 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கட்சியை, பாமக தலைமை நிலைய செயலாளராக இருந்த அன்பழகனின் மகன் முகிலன் தலைமையில் தொடங்கியுள்ளனர். பாமக கொடியை ஒத்த வடிவில், ராமதாஸின் உருவப் படம் பதிக்கப்பட்ட புதிய கொடியும் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக, திமுக, தமிழக வெற்றி கழகம் என எந்த கட்சியும் ராமதாசை கண்டு கொள்ளவில்லை. அதிமுக கூட்டணிக்கு சென்றால் மகன் கோபித்துக் கொள்வார், திமுகவுக்கு சென்றால் திருமாவளவன் கோபித்துக் கொள்வார், விஜய் கிட்ட நெருங்கவே விடவில்லை என்பதால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் ராமதாஸ்.
ராமதாஸ்
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தன்னை தேடி வந்த காலம் போய் தன்னை புறக்கணித்த காலம் வந்துவிட்டதை உணர்ந்த ராமதாஸ் எதற்கும் கேட்டுப் பார்ப்போம் என மீண்டும் திமுக அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினையும் ராமதாஸின் ஆதரவாளர் அருள் சந்தித்தது இதற்காகத்தான் என்கின்றனர். ஆனால் இரு தரப்பிலிருந்து இதுவரை பாசிட்டிவ் சிக்னல் வரவில்லை என்றும் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications