“ரூ.5000 இல்ல.. அஞ்சி ஆயிரம்”.. தேர்தல் பயத்தில் எக்ஸ்ட்ரா உரிமைத்தொகையாம்.. எடப்பாடி ரியாக்ஷன்!
சென்னை: “தேர்தல் தோல்வி பயம் முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக ரூ.1000 தராமல் இழுத்தடித்த ஸ்டாலின் இப்போது கோடைக்கால சிறப்புத் தொகை தருகிறாராம்... 2024, 2025ஆம் ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முதல்வர் அவர்களே?” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் 1 கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் இன்று திடீரென தலா ரூபாய் 5000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்று காலையிலேயே தமிழக பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திமுக அரசின் இந்த அதிரடி திட்டத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 5,000 வழங்கப்பட்டு உள்ளதை தேர்தலுக்கு “அஞ்சி ஆயிரம் ரூபாய்” கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கேள்வி
எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா ஸ்டாலின் அவர்களே?
சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patch work" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?
பயத்தில் வந்த அறிவிப்பு
செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை விடியா ஆட்சி வீட்டு Billலே சாட்சி என்று வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?
இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே...
1 கோடி பெண்களை நிராகரித்துள்ளீர்கள்
யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.
"அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி , 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் அதிரடி மூவ்
மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ. 1,000 உரிமைத்தொகை பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications