பயணிகள் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் பணிமனையில் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாக இரு மார்க்கங்களிலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மிக முக்கியமான பொது போக்குவரத்து சேவையாக புறநகர் மின்சார ரயில்கள் உள்ளன. அரக்கோணம், வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டாலும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான வழித்தடம் தான் எப்போதும் படு பிஸியாக காணப்படும். இந்த ரூட்டில் சில நிமிடங்கள் ரயில் தாமதம் ஆனாலும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்த வழித்தடத்தில் அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர், வேலைகளுக்குச் செல்வோர் என ஏராளமானோர் தினசரி, ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் மிக அதிக எண்ணிக்கையிலான பயணிகள் கூட்டம் இருக்கும்.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் வரையும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை, செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாலை 4 மணிக்குப் பிறகு வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் நலன் கருதி இன்று மட்டும் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "ஜனவரி 5 ஆம் தேதி ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகள், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகள், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்டபடி, முக்கிய பேருந்து நிலையங்களில் இதற்காக அலுவலர்களை நியமித்து இந்தப் பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications