மறுபடியும் முதல்ல இருந்தா.. இதுக்கு மேலே முடியாது தெய்வமே.. தாம்பரம் ரயில் பயணிகளின் குரலை பாருங்க
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ஆகஸ்ட் 14-ம் தேதி வரையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 63 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதி நேரமாகவும், சில ரயில்கள் முழுவதுமாகவும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் வழித்தடத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தாம்பரம் ரயில் நிலைய தண்டவாளத்தில் தற்போது உள்ள 220 கிலோ எடையுள்ள சிலிப்பர் கற்களை அகற்றிவிட்டு, புதிதாக 300 கிலோ எடை கொண்ட சிலிப்பர் கற்கள் அமைக்கப்படும். இதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அதில் ஏற்கனவே உள்ள ஜல்லி கற்கள் மாற்றப்பட்டிருக்கிறது. அதில் புதிய ஜல்லி கற்களை கொட்டி, அதன் மீது சிலிப்பர் கற்களை வைத்து தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதேபோல் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்ற தண்டவாளங்களுக்கு செல்லும் வகையில் கூடுதல் 'கிராஸ் ஓவர்' வேலையும் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இதுவரையில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் கிராஸ் ஓவர் செய்து வந்தது. இந்த பணிகளுக்கு பிறகு 50 கிலோ மீட்டர் வேகத்தில் 'கிராஸ் ஓவர்' செய்ய முடியும். அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க விரைவு ரயில் நிறுத்தமான 8-வது மற்றும் 9-வது நடைமேடையை பயணிகளின் நலனுக்காக நீட்டிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்களுக்காக 4 நடைமேடைகளும், விரைவு ரயிலுக்காக 4 நடைமேடைகளும் உள்ளது. கூடுதலாக நடைமேடை 9 மற்றும் 10 ஆகிய புதிய 2 நடைமேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14-ம் தேதி வரையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 63 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதி நேரமாகவும், சில ரயில்கள் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்கள் விடுமுறை நாட்களிலும், கடந்த 3 வேலை நாட்களிலும் மின்சார ரயில்கள் பகல் மற்றும் இரவு வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வரும் நிலையில், தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 14ம் தேதிக்குள் முடிய வாய்ப்பு இல்லை என்றே சொல்கிறார்கள்.
இதனால் வருகிற 18-ம் தேதி வரையில் மின்சார ரயில்கள் தற்போது உள்ள கால அட்டவணையின்படியே ரத்து செய்வது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்பபடுகிறது. இதுபற்றி விரைவில் அறிவிப்பு வரலாம் என்று சொல்கிறார்கள். இதனால் தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைகளை நம்பி உள்ள மக்கள் கலக்கத்தில் உள்ளார். தெய்மே இதற்கு மேல் தாங்க முடியாது என்று பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications