எமனுக்கு சவால் விட்ட கருணாநிதி? 100 வயது வரை வாழ்வேன்: அன்று பேசியது என்ன?
சென்னை: எனது உயிரை எமனால் பறிக்க முடியாது என்றும் நான் 100 வயது வரை வாழ்வேன் என்றும் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பேசிய பேச்சு இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அவரைப் பாராட்டினர். அப்போது 100 வயது வரை கருணாநிதி வாழ வேண்டும் என்று பலரும் பேசி இருந்தனர். அந்த விழாவின் இறுதியில் பேசிய கருணாநிதி, தனது உயிரை எமனால் கூட பறிக்க முடியாது என்று கூறியிருந்தார். அந்தப் பேச்சு இப்போது அவரது நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி திமுக தொண்டர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மு.கருணாநிதி தனது பேச்சில், "இங்கே பேசிய பலர் 100 ஆண்டுக்காலம் நான் வாழ வேண்டும் என்று சொன்னார்கள். அப்படி 100 வயது வரை வாழ வேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறேன். சில நேரங்களில் 'என்ன வாழ்க்கை இது?' என்று சலிப்பு வந்தாலும் கூட வாழலாம் என்றே விரும்புகிறேன். என் பொது வாழ்க்கையில் புயல், சூறாவளி, பூகம்பம் எனப் பல ஏற்படும்போது சலிப்பு உண்டாகி, என்ன வாழ்க்கை இது என மனதில் தோன்றினால் கூட வாழ வேண்டும் என்றே தோன்றுகிறது.
சில நேரங்களில் என்னைவிட முன்னோடிகள், கழகத்தின் இளைய தொண்டர்கள் இயற்கை எய்திவிடுகின்றபோது நாம் இருந்து இதை எல்லாம் பார்க்கவேண்டி இருக்கிறதே என்று கவலைப்பட்டிருக்கிறேன். அப்போதும் கூட நான் வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதற்குக் காரணம்? தமிழை வாழ வைக்கவேண்டும் என்பதற்காக, தமிழர்களை இன்னும் நலமாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அது ஒரு சுயநலமாகக் கூட இருக்கலாம். இந்தச் சுயநலத்தை விரும்பாத தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்டவன், தாய் மொழி மீது பற்றி கொண்டவன் யாருமே இருக்க முடியாது.
ஐதீகத்திலே நம்பப்படுவதைப் பல என் உயிரை எமன் பறிக்க முடியும் என்று நான் கருதவில்லை. பறிக்க முடியாது என்றுதான் சொல்கிறேன். என்ன நெஞ்சழுத்தம் இவனுக்கு? என்ன அகம்பாவம் இவனுக்கு? என்ன ஆணவம்? என்று கருதுபவர்களுக்குச் சொல்கிறேன். மாமன்னன் கிள்ளிவளவன் இறந்துவிடுகிறான். அவனைக் காண புலவர் ஒருவர் ஓடி வருகிறார். அப்போது கிள்ளிவளவன் உடல் வைக்கப்பட்டுள்ள மாளிகைக்கு வந்து ஒரு கவிதை பாடுகிறார். என்ன பாடுகிறார் தெரியுமா?
""செற்றன்று அயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன்றாகல் வேண்டும்" என்று பாடினார்.

இதற்கு என்ன அர்த்தம்? உன்னை எமன் எப்படிக் கொன்றான் என்று எண்ணிப் பார்க்கிறேன் கிள்ளிவளவா? உறவினரைப் போலவோ, உற்றாரைப் போலவோ வந்து உன் உயிரைக் கொண்டு போய் இருக்க முடியாது. அல்லது பகைவனாக வந்தும் உன்னுடைய உயிரைக் கொண்டு போய் இருக்க முடியாது. பாடுநர் போல கைதொழுது ஏத்தி இரந்தன்றாகல் வேண்டும் என்றார். அதாவது தமிழ்ப் புலவரைப் போல வந்து உன் உயிரை இரைந்து கேட்டு அல்லவா உன் உயிரைப் பெற்றுப் போய் இருக்கவேண்டும்? உயிரைப் பிச்சைக் கேட்டுதான் கொண்டு போய் இருப்பான் என்று புலவர் பாடி உள்ளார். எப்போது அந்தப் பிச்சையைக் கிள்ளிவளவன் கொடுத்தானாம்? தமிழுக்காக, தமிழ்ப் புலவனுக்காக அந்தப் பிச்சையைக் கொடுத்தானாம்.
அப்படி ஒரு காலம் வரும்போதுதான் என் உயிரை நான் கொடுப்பேன். வேறு யாருக்கும் தரமாட்டேன். என் உயிர் நீங்கள் எண்ணுகின்றபடி நிச்சயமாக 100 ஆண்டுக்கு மேலும் இருக்கும். அதற்குள் கொடுக்க வேண்டும் என்றால், அது தமிழுக்காக, தமிழ்நாட்டுக்காக, தமிழருக்காக, தமிழ் கலைக்காக, தமிழ்ப் பண்பாட்டுக்காக, தமிழ் இலக்கியத்திற்காகத்தான் கொடுப்பேன்" என்று பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications