டாஸ்மாக்கில் மீண்டும் அதிரடி.. பாட்டிலுக்கு ரூ.10.. காலி மது பாட்டிலை திரும்ப பெறும் திட்டம் ஆரம்பம்
சென்னை: தமிழகத்தின் சாலைகளில், மலைப்பிரதேசங்களில் காலி மதுபாட்டில்கள் வீசிப்பட்டுவிடுகின்றன.. இதனால் கால்நடைகளின் கால்களில் இந்த மது பாட்டில்கள் குத்தி காயங்களையும் ஏற்படுத்திவிடுகின்றன.. எனவே இதனை தடுக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது இந்த திட்ம் குறித்த அடுத்தக்கட்ட நகர்வு குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது குடிமகன்களின் கவனம் பெற்று வருகிறது
தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், மலைப்பகுதிகளில் வாழும் மக்கள், மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கேயே வீசி சென்று விடுகிறார்கள். மலைப்பகுதிகளில், காடுகளில், சாலையோரங்களில் மதுபாட்டில்களை வீசி விடுவதால், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது..

முக்கியமாக கால்நடைகளின் கால்களில் இத்தகைய மது பாட்டில்கள் குத்தி காயங்களையும் தந்துவிடுகின்றன.. அதனால்தான், நீதிமன்ற உத்தரவுப்பட மதுபான கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது.
ரூ.10 கூடுதல் வசூல்
இந்த திட்டத்தின் மூலம் மதுபான கடைகளில் ரூ.10 அதிகமாக மது பானங்கள் விற்கப்பட்டன. காலி பாட்டிலை மீண்டும் கடைகளில் திருப்பி தந்து, 10 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியானது.. அதாவது, MRP எனப்படும் அதிகபட்ச சில்லரை விலையுடன், கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
இதனால் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவும், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மலைப் பகுதிகள் உள்ள 9 மாவட்டங்களிலும் உள்ள மதுபானக்கடைகளில் அமல்படுத்தப்பட்டது.
காலி மதுப்பாட்டில்கள்
பிறகு 7 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், எஞ்சியிருக்கும் மாவட்டங்களிலும் தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரி அது முறைப்படுத்தப்பட்டும் உள்ளது..
காலி பாட்டிலை கடைகளில் வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும். இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்டம் வாரியாக, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம்
டெண்டரில் தேர்வாகும் நிறுவனங்கள், மது கடைகளில் சேகரிக்கப்படும் காலி பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி, சென்னை மண்டலத்தில் உள்ள திருவள்ளூர் தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படுகிறது...
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தொடர்ந்து, மெல்ல மெல்ல, மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாட்டில்கள் வியாபாரிகள் நல சங்கம்
முன்னதாக, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்றும், கடந்த வருடம் நீதிமன்றம் 20 முறைக்கு மேல் டாஸ்மாக் நிறுவனத்தை கண்டித்தும், இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பாட்டில்கள் வியாபாரிகள் நல சங்கத்தின் சங்கத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர்.. இந்நிலையில், இத்திட்டம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது பலரது கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications