ஜாபர் சேட்டிடம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி! 4 மணி நேரம் விசாரணை! ஐ.பெரியசாமிக்கு மீண்டும் சம்மன்?
சென்னை: தமிழக உளவுத்துறை முன்னாள் ஐஜி ஜாபர் சேட்டிடம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 மணி நேரமாக துருவி துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்று அதில் வீடு கட்டி விற்பனை செய்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாபர் சேட் மீது வழக்குப்பதியப்பட்டு அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
ஜாபர் சேட்டுக்கு நில ஒதுக்கீடு செய்த காரணத்தால் அப்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சரும் இப்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கும் சேர்ந்து சிக்கல் எழுந்துள்ளது.

ஜாபர் சேட்
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரியாக திகழ்ந்தவர் ஜாபர் சேட். வெட்டி வா என்றால் கட்டி வரக் கூடிய அளவுக்கு கருணாநிதியின் மனவோட்டங்களை அறிந்து உளவுத்துறையில் ஐ.ஜி.யாக செயலாற்றியவர். 1989 பேட்ச் அதிகாரியான இவர் தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி., சிபிசிஐடி டிஜிபி, என பல உயர் பதவிகளை வகித்தவர். கடைசியாக அவர் பணி ஓய்வு பெறும் போதும் தீயணைப்புத்துறை டிஜிபியாக பாணியாற்றினார்.

அதிமுக ஆட்சி
திமுக ஆட்சியில் முதலமைச்சர் கருணாநிதியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த இவர், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமிற்கு பந்தாடப்பட்டார். காரணம் அந்தளவுக்கு இவர் மீது ஜெயலலிதா கோபத்தில் இருந்தார். இதனிடையே ஜாபர் சேட் தனது மனைவி சமூக சேவகர் எனக் கூறி 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்றிருந்தார். பெசண்ட் நகர் கோட்டத்தின் திருவான்மியூர் புறநகர் திட்டத்தில் இந்த நில ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

வர்த்தக நோக்கில்
இதனிடையே அங்கு வர்த்தக நோக்கில் அடுக்குமாடு குடியிருப்பு கட்டி அதன் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாக ஜாபர் சேட் மீது 2011-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. ஐ.பி.எஸ். அதிகாரியான தன் மீது வழக்குப்பதிய மத்திய அரசின் அனுமதியை லஞ்ச ஒழிப்புத்துறை பெறவில்லை எனக் கோரி ஜாபர் சேட் நீதிமன்றத்தை நாடினார். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறை
இதையடுத்து ஜாபர் சேட் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஒழிப்புத்துறைத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இப்படியாக இந்த வழக்கு சென்று கொண்டிருந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை இதை கையில் எடுத்தது. ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறையின் பிடிகள் இறுகத் தொடங்கின.

4 மணி நேரம்
இதனிடையே அமலாக்கத்துறை சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரான ஜாபர் சேட்டிடம் 4 மணி நேரத்துக்கு மேலாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணை தகவலை வெளியிட அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்துள்ள நிலையில், இனியும் விசாரணைக்கு அவர் அழைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜாபர் சேட்டுக்கு சர்ச்சைக்குரிய நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் அப்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஐ.பெரியசாமி இப்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பெரியசாமிக்கு சம்மன்
கடந்த 17-ஆம் தேதி அமைச்சர் ஐ.பெரிசாமிக்கு இது தொடர்பான சம்மன் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து சென்றிருக்கிறது. ஆனார் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதனால் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து மீண்டும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்மன் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications