அதிமுக முன்னாள் அமைச்சர் பிவி ரமணா வழக்கில் சிபிஐ ஆவணங்களை கொடுத்ததும் விசாரணை.. அமலாக்கத்துறை தகவல்
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும் தடையை மீறி பல இடங்களில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியபோது, ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் லஞ்சம் வழங்கப்பட்டவர்களின் லிஸ்ட் ஒன்று இருந்ததாக கூறப்பட்டது.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதில் மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து கைது செய்தது.
இந்நிலையில் சிபிஐ வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கதுறை வழக்கு பதிவு செய்துள்ளது. முறைகேடு மூலமாக பெற்ற பணத்தை சட்டவிரோதமாக முதலீடுகள் செய்துள்ளதாகவும் எனவே இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
விக்னேஷ், மாதவ ராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, ஏ.எல்.காயத்ரி, மானசா, அருணாகுமாரி, சூர்ய புஷ்பாஞ்சலி, பத்ம பிரியா அஞ்சனி தேவி, விஸ்வநாத், பத்ரிநாத், துர்கா வீர ஹனுமான், ஸ்ரீ வாசவி, நாக பார்வதி தேவி, பி.சேஷகிரி ராவ், ஏ.மனோகர், கிருஷ்ண சுமந்த், சிவக்குமார், பி.செந்தில் முருகன், ஆர்.மன்னர்மன்னன், வி.சம்பத், வி.எஸ்.குறிஞ்சி செல்வன், எஸ்.கணேசன், நவநீத கிருஷ்ண பாண்டியன், பி.வி ரமணா, டி.நடராஜன், பி.ஆர்.சீனிவாசன் மற்றும் நிறுவனங்கள் விஜயந்தி ஸ்பின்னர்ஸ், மேதா டைரி பிரைவேட் லிமிடெட், காயத்ரி ரியல் எஸ்டேட் , குபேரா இண்டஸ்ட்ரீஸ் என 27 நபர்கள் மற்றும் 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி மலர் வாலன்டினா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட உள்ள கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தங்கள் தரப்பில் அந்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி மலர் வாலண்டினா வரும் மார்ச் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
முன்னதாக, சிபிஐ - குட்கா முறைகேடு வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சிபிஐ, வாய்தா மேல் வாய்தா வாங்கி வருவதற்கு அதிருப்தி தெரிவித்து, விசாரணை அதிகாரி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications