SIR: ஒரு வாக்காளர் கூட விடுபடக்கூடாது.. கவனமாக இருங்க! திமுக மா.செ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
சென்னை: ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விட கூடாது, எஸ்ஐஆர் வாக்காளர் வரைவு பட்டியல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் திமுகவிற்கு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நமது வாக்காளர்கள் இருக்கிறார்களா என பார்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் தேர்தல் பணிகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியே தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் எனும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணியை மேற்கொண்டது. இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டன.
இடம்பெயர்தல், இறந்தவர்கள் என மொத்தமாக 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது. இந்த நிலையில் தான் திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் வரைவு வாக்காளர் பட்டியலில் விரைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காணொளி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் வரும் ஜனவரி 18 ஆம் தேதி வரை அதற்கான விண்ணப்பங்களை நிரப்பி சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதற்குள் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்களை இணைக்க அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
திமுக மகளிரணி மாநாட்டை
ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விட கூடாது, எஸ்ஐஆர் வாக்காளர் வரைவு பட்டியல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நமது வாக்காளர்கள் இருக்கிறார்களா என பார்க்க வேண்டும்.
வரைவு வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் நிர்வாகிகள் விரைந்து செயல்பட வேண்டும். புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் திமுகவுக்கு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். 29 ஆம் தேதி நடைபெற உள்ள திமுக மகளிரணி மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications