டிடிவி தினகரனிடம் கேள்வி.. பாய்ந்து பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி.. பிரஸ்மீட்டில் "தக்" சம்பவம்
செங்கல்பட்டு: பழனிசாமி, டிடிவி தினகரன் இருவரிடமும் அவர்கள் இடையே நிலவி வந்த பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, வேறு ஏதாவது நல்ல கேள்வி கேளுங்கள். இந்த ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உள்ள கட்சிகள் கூட்டணியாக இணைவோம் என்று கூறினார்.
மதுராந்தகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக அன்புமணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில், 5 லட்சம் பேர் கலந்து கொண்ட மாநாடாக நடந்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

திமுக ஒரு தீயசக்தி. தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி தலைவிரித்தாடுகிறது. எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. தமிழ்நாட்டின் நலனுக்காக மத்தியில் இருந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வருவோம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வலிமையானது. அமமுக வருகை மேலும் வலிமையாக்கியுள்ளது.
எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளன. அதை வெளிப்படையாக கூற முடியாது. இணையும்போது அதிகாரபூர்வமாக அறிவிப்போம். நாங்கள் ஒற்றுமையாக இருக்க கூடாது என்று ஊடகங்கள் நினைக்கின்றன. நானும் டிடிவி தினகரனும் அம்மா வளர்த்த பிள்ளைகள். எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டோம். கூட்டணியின் வெற்றி தான் முக்கியம் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் இருவரிடமும் அவர்கள் இடையே நிலவி வந்த பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது டென்ஷன் ஆன எடப்பாடி, வேறு ஏதாவது நல்ல கேள்வி கேளுங்கள். இந்த ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உள்ள கட்சிகள் கூட்டணியாக இணைவோம். விவசாயிகள், அரசு ஊழியர்கள் என்று தினசரி ஏதாவது போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டை போராட்ட பூமியாக மாற்றியுள்ளனர்.
திமுகவை பற்றியும், ஸ்டாலின் பற்றியும் வைகோ விமர்சிக்கவில்லையா. இப்போது வைகோ திமுகவுடன் இணையவில்லையா. எங்களுக்குள் குழப்பம் ஏற்படுத்த நினைக்க வேண்டாம். அம்மா விட்டு சென்ற பணிகளை நாங்கள் செய்வோம். காங்கிரஸைப் பற்றி திமுக விமர்சிக்கவில்லையா. அறிவாலயத்தில் முதல் தளத்தில் ரைடு நடக்கும்போது, தரைத்தளத்தில் கூட்டணி பேசியவர்கள் எங்களைப் பற்றி பேசலாமா என்றார்.












Click it and Unblock the Notifications