முழுசா 3 மாசம் கூட ஆகலை.. அதுக்குள்ள கருத்து சொல்றீங்களோ! லீமா ரோஸை லெஃப் ரைட் வாங்கிய எடப்பாடி!
சென்னை: தமிழகத்தின் அடுத்த அரசை அமைக்கப் போவது விஜய் தான் என்பது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் கூட்டணி அமைக்க வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தமிழக வெற்றி கழகம். இந்த நிலையில் அதிமுக தவெக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் லால்குடி எம்எல்ஏவான லீமா ரோஸ்.
இந்த நிலையில் இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே எடப்பாடி பழனிச்சாமி அவரை தொடர்பு கொண்டு கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சியில் சேர்ந்து முழுதாக மூன்று மாதம் கூட ஆகாத நிலையில் தலைமை குறித்த கருத்துக்களை பொதுவெளியில் பேசக்கூடாது என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழக அரசியல் களம் இன்னும் பரபரப்பில் இருக்கும் நிலையில், நொடிக்கு நொடி புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறிப்பாக அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லீமா ரோஸ் பேச்சு
இந்நிலையில், லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் பேசியது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளதூஉ, "அதிமுக - தவெக இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் நல்ல முடிவு வரும் என நம்புகிறோம்" என்று கூறினார்.
எடப்பாடி கண்டிப்பு
ஆனால் இந்தக் கருத்து வெளியானதும் அதிமுக கட்சிக்குள்ளேயே அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி, லீமா ரோஸை எடப்பாடி பழனிசாமி கண்டித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், அதிமுகவின் மூத்த தலைவர் ஓ.எஸ். மணியன் வேறு விதமான கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
"அதிமுக எந்த சூழ்நிலையிலும் தவெகவுக்கு ஆதரவு அளிக்காது. தமிழ்நாட்டில் அதிமுக தான் முக்கிய மாற்று சக்தி" என்று அவர் தெளிவாக கூறியுள்ளார். இதனால், அதிமுக தரப்பிலேயே முரண்பட்ட தகவல்கள் வெளியாகி அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளது. மறுபக்கம், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க இன்னும் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
இதனால், பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளின் பெயர்கள் அதிகமாக பேசப்படுகின்றன. காங்கிரஸ் தரப்பில் தலைமை ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டாலும், அந்தக் கட்சி ஆதரவு அளிக்கும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
விசிக மற்றும் இடதுசாரி
ஆனால், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தொடர்பாக வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. சிலர் ஆதரவு தரலாம் என கூறினாலும், சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், விஜய் எந்த கூட்டணியைத் தேர்வு செய்கிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையில், இந்தத் தேர்தல் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வி அடைந்தது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
தவெக விஜய்
அதே நேரத்தில், விஜய் தலைமையிலான கட்சி முதல் தேர்தலிலேயே 34 சதவீத வாக்குகளை பெற்று 108 இடங்களில் வெற்றி பெற்றது அரசியல் மாற்றத்தைக் காட்டுகிறது. அதிமுக - தவெக இடையே உண்மையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா, அல்லது அது லீமா ரோஸின் தனிப்பட்ட கருத்தா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் இந்த தகவல் வெளிவந்ததுமே அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. நாளைக்குள் யார் யாருடன் இணைகிறார்கள் என்பதே தமிழகத்தின் அடுத்த அரசை தீர்மானிக்கப் போகிறது.












Click it and Unblock the Notifications