“எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார்".. கொந்தளித்த எடப்பாடி!
சென்னை: "தமிழக மக்கள் கடவுளாக மதிக்கும் எம்ஜிஆரை விமர்சித்தால், அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போய்விடுவார்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் குறித்து திருமாவளவன் பேசியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எம்ஜிஆரை விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்துள்ளார்.

விசிக
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், திமுக உடனான கூட்டணியை விசிக உறுதி செய்துள்ளது. சூழலை அறிந்து தொகுதி பங்கீட்டில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என்று கூறியுள்ள திருமாவளவன், சீட் எண்ணிக்கைக்காக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டோம் என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார்.
எம்ஜிஆர் பற்றி திருமாவளவன்
இந்நிலையில் பேசிய திருமாவளவன், "எம்ஜிஆர் கருணாநிதிக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்தார், விமர்சனம் செய்தார். திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்வதற்குக் காரணமாக இருந்தார். ஒரு பார்ப்பன பெண்மணியே திராவிட கட்சியின் தலைவராக அமையப் பாதை போட்டுக் கொடுத்தார் என்ற விமர்சனங்கள் இருக்கிறது" எனப் பேசி இருந்தார்.
அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆரை திருமாவளவன் விமர்சித்துப் பேசியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக மக்கள் கடவுளாக மதிக்கும் எம்ஜிஆரை விமர்சித்தால், அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போய்விடுவார்" என்று அபதிலடி கொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பதிலடி
சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆரை தமிழக மக்கள் தெய்வமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவரை திருமாவளவன் விமர்சனம் செய்கிறார். அப்படி செய்தால் அரசியலில் அவர் காணாமல் போய்விடுவார்.
அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே நான் பல பொதுக்கூட்டங்களில் சொல்லிவிட்டேன். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. ஒரு ஜாதியை வைத்து எல்லாம் அரசியல் பண்ணுவது என்பது இயலாத காரியம். இன்றைக்கு தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அதிமுக, ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்சி கட்சி என்று பேசி வருகிறேன். எங்களின் கட்சியில் பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
8 மாதம் இருக்கு
நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம். இந்த ஒற்றுமை திருமாவளவனுக்குப் பொறுக்கவில்லை. அவர் நினைத்தது நடக்கவில்லை என்ற எரிச்சல். அதன் வெளிப்பாடுதான் இப்படிப்பட்ட வார்த்தைகளை கக்கிக் கொண்டு இருக்கிறார்.
திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் வந்துவிட்டன. இந்த கூட்டணி இன்னும் 8 மாதத்துக்கு நிலைக்குமா, நிலைக்காதா என்ற கேள்வி இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது. அந்த 8 மாத காலத்தில் சிறப்பான கூட்டணி அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications