ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல! திமுக தான்.. பாஜக தமிழிசை அட்டாக்
சென்னை: திமுகவின் அராஜக அரசியலால் நேர்மையாக தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இன்மையால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தும் திமுகவை 2026- இல் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல.. திமுக தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகே எஸ் இளங்கோவன் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 8 ஆம் தேதி நடைபெறுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈவேரா களம் இறங்கி வெற்றி பெற்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் மறைந்ததை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் இறங்கி வெற்றி பெற்றார். இந்த நிலையில் தான் அவர் உயிரிழந்ததால் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த முறை போலவே இப்போதும் காங்கிரஸ் சார்பில் தான் வேட்பாளர் நிறுத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுகவின் விசி சந்திரகுமார் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்த தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு எம் எல் ஏ ஆனவர். ஈவேரா குடும்பத்தினர் களம் இறங்கினால் மட்டுமே அந்த தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க திமுக முடிவு செய்திருந்தது. ஆனால் அவரது குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிட விருப்பம் தெரிவிக்காததால், திமுக சார்பில் வேட்பாளர் விசி சந்திரகுமார் களம் இறக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து விட்டது. இதேபோன்று அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் ஈரோடு கிழக்கு தொகுதியை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டது. ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகமும் இந்த தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்றும், 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்றும் அறிவித்து விட்டது. இதனால் திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாஜகவும் இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டது. அதே நேரத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் திமுக - நாம் தமிழர் கட்சி இடையே தான் போட்டி என்று ஆகியுள்ளது. பெரிய கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், அனைத்து முக்கிய கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என்பது செய்தி.. புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல... உண்மையில் புறக்கணிக்கப்படுவது திமுக தான்.. என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:- பாஜகவும்... ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது... அனைத்து முக்கிய கட்சிகளும்.. இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என்பது செய்தி... புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல... உண்மையில் புறக்கணிக்கப்படுவது திமுக தான்... யாரும் நம்பிக்கையோடு... போட்டி போடக்கூட தகுதியற்றது திமுக...
என்பதை அனைத்துக் கட்சிகளின் முடிவும் காண்பிக்கிறது... திமுகவின் அராஜக அரசியலால் நேர்மையாக தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இன்மையால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தும் திமுகவை 2026- இல் மக்கள் புறக்கணிப்பார்கள்.... இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications