களமிறங்கும் ’கை’ துளிர்க்குமா இரட்டை இலை..குறுக்கே வரும் தாமரை? ஈரோடு இடை தேர்தலில் இத்தனை போட்டியா?
சென்னை : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவும் போட்டியிடும் என கூறப்படும் நிலையில், பாமக, நாம் தமிழர் அமமுக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் களமிறங்கும் என்பதால் இந்த தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவேரா திடீரென உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டி இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர் நடக்கும் முதல் இடைத் தேர்தல் என்பதாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் தேர்தல் என்பதாலும் இந்த தேர்தல் மிகவும் ஆர்வத்துடன் எதிர் நோக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
அதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு ஜனவரி 31ஆம் தேதி மனு தாக்கல் தொடங்கி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக பிப்ரவரி 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது எட்டாம் தேதியும் வாபஸ் பெற கடைசி தேதி பிப்ரவரி 10ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.
'மீசைக்காரர்’ இறங்குறாராமே.. இடைத்தேர்தலில் “இரட்டை இலை” திடீரென பற்றவைத்த வெடி! ஆஹா இதென்ன வியூகம்?
காங்கிரஸ்
கடந்த முறை சட்டசபை தேர்தலில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அந்த தேர்தலில் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் திருமகன் ஈவெரா மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதியில் தங்கள் கட்சியே போட்டியிடும் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. மேலும் திமுகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என கூறப்படும் நிலையில் நேரடியாக காங்கிரஸ் கட்சி வேட்பாளராக யார் போட்டிடுவார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எது எப்படி எனும் காங்கிரஸின் கைச்சின்னம் தேர்தலில் களம் இறங்குவது உறுதியாக இருக்கிறது.
அதிமுக
தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிகளை தேர்தலில் அதிமுகவின் நிலைமை தான் இருதலைக் கொல்லி இரும்பாக இருக்கிறது. கடந்த முறை தேர்தலில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில் தற்போது அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் அதனை விட்டுக் கொடுத்திருக்கிறார் ஜிகே வாசன். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தேர்தலில் போட்டியிட்ட யுவராஜும் விட்டுக் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் மிகப்பெரிய சிக்கல் ஒன்றும் இருக்கிறது. எடப்பாடி தரப்பு வேட்பாளரை அறிவித்தால் நிச்சயம் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை அறிவிப்பார். இதனால் அதிமுக சின்னமான இரட்டை இலை முடக்கப்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதற்குள்ளாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தாலுமே வேட்பு மனு தாக்கலுக்குள்ளாக தீர்ப்பு கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி. அதனால் அதிமுக இரட்டை இலை சின்னம் தேர்தலில் துளிர்ப்பது சிரமம் தான்.
பாஜக
தற்போதைய நிலவரப்படி ஈரோடு கிழக்குத் தேர்தலில் பாஜகவும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவே கூறப்படுகிறது. திமுக வேட்பாளர் களமிறங்கினால் அதிமுக போட்டியிடட்டும் காங்கிரஸ் களமிறங்கினால் பாஜக போட்டியிடும் என அக்கட்சித் தலைவர்கள் கூறி வந்த நிலையில் தற்போது அதிமுக போட்டி போடுவது உறுதியாக இருக்கிறது. வேட்பாளர் மற்றும் சின்னம் தான் சிக்கலில் இருக்கிறது. எனவே சிக்கலை தவிர்க்க தற்போது பாஜக போட்டியிடலாம் எனவும் இதற்காக கட்சி தலைவர்கள் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நிச்சயம் அதிமுக இந்த முறை பாஜகவுக்கு தொகுதியை விட்டுக் கொடுக்காது. அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை போல பாஜக தனித்து களம் இறங்கலாம் இதற்கு வாய்ப்புகளும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
பாமக
தமிழகத்தில் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவு அக்கட்சிக்கு வாக்கு சதவீதம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக பாமக எந்த தேர்தல் போட்டியிடலாமா என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. காரணம் கடந்து சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் பாமகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் பாமக திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்குமா அல்லது தேர்தலில் தனித்து களமிறங்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அமமுக
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து 27ஆம் தேதி அறிவிப்பு என கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். பெரும்பாலான நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என கூறியிருப்பதால் போட்டியிடும் எண்ணம் இருக்கிறது. ஏன் தானே கூட போட்டியிடலாம் என டிடிவி தினகரன் கூறியிருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த தேர்தலை போல சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டால் இந்த தேர்தல் பல முனை போட்டியாக இருக்கும்.
நாம் தமிழர் சீமான்
கடந்த பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கூறியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வரும் நிலையில் இந்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் நானும் தொகுதியில் பிரச்சாரம் செய்வேன் எனக் கூறியிருக்கிறார். இதனால் பலமுனை போட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிலவுவது உறுதியாக இருக்கிறது. இதேபோல் பல சிறிய கட்சிகளும், சுயேட்சைகளும் தேர்தலில் போட்டியிடுவதும் வழக்கம் தானே..