யோகா செய்தால் அணுகுண்டே போட்டாலும் அங்க என்ன சப்தம் என அமைதியாக கேட்பார்கள்.. ஈரோடு மகேஷ்
சென்னை: யோகா செய்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்றும் கணவன் மனைவிக்குள் லவ் அதிகரிக்கும் என்றும் ஈரோடு மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கான யோகா பயிற்சி வகுப்பு தனியார் மருத்துவமனை சார்பில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ஆரோக்கியத்துக்கு அடிப்படை எது தெரியுமா. எந்த மனிதன் மனத்திற்குள் உற்சாகத்தை தேக்கி வைத்திருக்கிறானோ அவனுக்கு நோயினுடைய பாதிப்பு அவ்வளவு அதிகமாக வருவதில்லை என்பது மருத்துவம் சொல்லுகிற உண்மை.
இந்த நிகழ்ச்சி கடந்த 21-ம் தேதி நடந்திருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீங்கள் பொறுமையாக நான் பேசுவதை கேட்கிறீர்கள். மற்ற வேலை நாட்கள் என்றால் வாக்கிங் போய்விட்டு அடுத்தடுத்த வேலைகளை பார்க்க சென்றுவிடுவீர்கள்.
கோயில் பிரகாரத்தை கூட பொறுமையாக சுற்ற முடியாத அளவுக்கு பலருக்கு வாழ்க்கை பரபரப்பாகிவிட்டது. இத்தனை பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவில் ஏன் யோகா தேவை. மனது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பார்கள். உள்ளத்தினிலே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்பார்கள்.
விவேகானந்தரிடம் ஒருவர் கேட்டார், சுவாமி கடவுளை எப்போது தரிசிக்க முடியும் என கேட்டாராம் . அதற்கு விவேகானந்தர், உனக்கு ஃபுட்பால் விளையாட தெரியுமா என கேட்டார், அதற்கு அந்த நபர் எனக்கு தெரியாது என்றாராம். அப்படியென்றால் உன்னால் கடவுளை தரிசிக்கவே முடியாது என்றாராம். உடனே அந்த நபர் கோபமடைந்து நான் கடவுளை தரிசிக்க கேட்கிறேன். நீங்கள் ஃபுட்பால் குறித்து பேசுகிறீர்கள். நீங்கள் என்ன துறவி என்றாராம்.
அதற்கு விவேகானந்தர் எந்த மனிதனின் உடல் வலிமையாக இருக்கிறதோ அந்த மனிதனின் எண்ணங்களும் வலிமையாக இருக்கும். எந்த மனிதனின் எண்ணங்கள் வலிமையாக இருக்கிறதோ அவன்தான் இறைவனை நோக்கி பயணிக்க முடியும். அதனால்தான் நான் சொன்னேன். நீ உடலை வலிமையாக்கும், உள்ளம் வலிமையாகும் என்றாராம்.
யோகா செய்ய செய்ய மனம் அமைதியாகும். யோகா செய்தால் உங்கள் மனைவிக்கே உங்களை பிடிக்கும். யோகாவால் கோபமே வராது. பக்கத்து தெருவில் வெடிகுண்டே விழுந்தாலும் என்ன சப்தம் என்றுதான் கேட்போம். பதற மாட்டோம். மனம் அமைதி பெறும். எனவே யோகா செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications