"உன் ஜாதிக்கு தரப்பட்ட வேலையை நீ பண்ணு.. அதுதான் தர்மம்!" வார்த்தையை விட்ட அண்ணாமலை.. பாயும் திமுக!
சென்னை: திமுக எம்பி ஆ. ராசாவின் பேச்சை பாஜக தலைவர்கள் எதிர்க்கும் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்து மதத்தில் இருக்கும் ஜாதி மத வேறுபாடுகள் பற்றி திமுக எம்பி ஆ ராசா சமீபத்தில் பேசி இருந்தார். ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன், என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவரின் இந்த பேச்சை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். பாஜக சார்பாக ஆ. ராசா பேச்சுக்கு எதிராக கடுமையான போராட்டங்களும் செய்தன.
ஆனால் ஆ ராசாவின் பேச்சுக்கு எதிராக பாஜகவினர் யாரும் வழக்கு தொடுக்கவில்லை.
ஏ வாயை மூடு.. ஆ. ராசா பற்றி கேட்டதும் பதறி எழுந்த ஆதீனம்.. அப்போ
அண்ணாமலை
பாஜக தலைவர்கள் இந்த பேச்சை எதிர்க்கும் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அண்ணாமலை, தர்மம் என்பது மனு நீதியில் இருந்து வந்த வார்த்தை. தர்மம் என்ன சொல்கிறது என்றால்.. உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நீ செய் என்கிறார்கள். அதாவது உனக்கு கொடுக்கப்பட்ட வேலை.. உன் சமூகத்திற்கு தரப்பட்ட வேலையை செய்.
ஜாதி வேலை
உன் ஜாதிக்கு தரப்பட்ட வேலையை நீ செய். அதுவே தர்மம். அதுதான் தர்ம நீதி. இதுதான் மனு நீதியில் உள்ள தர்மம் என்ற வார்த்தை கூறுகிறது, என்று அண்ணாமலை பேசி இருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு, ஆ. ராசா குறிப்பிட்ட ஜாதி வேறுபாடுகளை உறுதி செய்வது போலவே இருக்கிறது. ஆ. ராசா இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். அதை உறுதியை செய்யும் வகையில் அண்ணாமலை பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
திமுக விமர்சனம்
திமுக சுற்றுசூழல் துறை செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், அண்ணாமலை, நீங்கள் என்ன இப்படி மனு நீதிபதி பற்றி பாடம்.எடுத்துள்ளீர்கள். நீங்கள் இதற்கு முன் உங்களின் பெற்றோர் உங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து மேலிடத்திற்கு கொண்டு கூறினீர்கள். இப்போது என்ன இப்படி பேசுகிறீர்கள். நீங்கள் அடைந்த உயரத்திற்கு கல்விதான் காரணம். அதற்காக உங்களுக்கு திமுக கொடுத்த இடஒதுக்கீடுதான் காரணம்.
திராவிட வளர்ச்சி
திராவிடம் உங்களை எப்படி வளர்த்தது என்று மறக்க வேண்டாம். ஆனால் ஆரியம் உங்களை மீண்டும் ஆடு மேய்க்க வைத்து உள்ளது. அவர்களுக்கு நீங்கள் போலீஸ் அதிகாரியாகவோ, லாயராகவோ, நீதிபதியாகவோ இருக்க கூடாது. நீங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு தவறான உதாரணம். இதை பற்றி எல்லாம் பேசுவதற்கு பதிலாக யுபிஎஸ்சி தேர்வில் எப்படி வெற்றிபெறுவது என்று நீங்கள் ஆலோசனை வழங்கி இருக்கலாம் என்று விமர்சனம் செய்துள்ளார்.