கிளாம்பாக்கத்தில் இருந்து எல்லாமே சோல்ட் அவுட்.. எந்த ஊருக்கு போதிய சிறப்பு பேருந்துகள் இல்லை
சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் விடப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். டிஎன்எஸ்டிசியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விடப்பட்ட சிறப்பு பேருந்துகள் உள்பட எதிலுமே டிக்கெட்கள் இல்லை.மதுரை, தேனி , திண்டுக்கல் உள்பட பல்வேறு தென்மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் அவதிப்படுகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது . இந்ததேர்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர், சசிகலா ஆகிய ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது. முதல் முறை வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் பலர் இந்த முறை வாக்களிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால், பலர் வாக்களிக்க போக முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்..

ஏனெனில் பொதுவாக கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு முக்கியமான நாட்களில் வழக்கமான பேருந்துகளை தவிர, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். சொந்த ஊர் சென்று வாக்களிக்க புறப்பட்ட பல முதல் தலைமுறை வாக்காளர்கள், ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை பார்த்து ஆடிப்போயிருக்கிறார்கள், குறைந்தபட்ச டிக்கெட் 1800 ரூபாய் ஆகவும் அதிகபட்சம் 2500 முதல் 3000 வரையிலும் உள்ளது.
இந்த பக்கம் ரயிலில் போகலாம் என்றால் அதற்கும் வழியில்லை.. ஏனெனில் ரயில்களில் ஏற்கனவே புக்கிங் முடிந்துவிட்டது. கால் வைக்கக்கூட இடம் இல்லாத அளவிற்கு நிலைமை இருக்கிறது. சரி அரசு பேருந்துகளில் போகலாம் என்றால், அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது இந்த முறை. ஏனெனில் டிஎன்எஸ்டிசி அதிகாரப்பூர்வ இணையதளங்களில் போதிய சிறப்பு பேருந்துகள் திருச்சிக்கு கூட இந்த முறைஇயக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் இல்லை.. ஒரு பேருந்துகள் கூட புதிதாக சேர்க்கப்படவும் இல்லை.. எல்லா பேருந்துகளுமே சோல்ட் அவுட் என்றே வருகின்றன.
திருச்சியிலேயே இந்த நிலைமை என்றால், மதுரை, திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு, சேலம் என ஊருக்கும் சிறப்பு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இல்லை. நேரில் போய் நின்று, அந்த நேரத்தில் நிலைமைக்கு ஏற்ப வரும் சிறப்பு பேருந்துகளை தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள். பொங்கல், தீபாவளி போல் இதற்கும் அதிக பேருந்துகளை அரசு இயக்கி இருக்க வேண்டும். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தல் திருவிழாவிற்கு போதிய பேருந்துவசதிகள் இல்லாமல் இருப்பது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. திரும்ப வருவதற்காகவும் அரசு போதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.














Click it and Unblock the Notifications