எத்தனை முறை ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினாலும்.. இறுதி வெற்றி எங்களுக்கே.. ஜெயக்குமார் பதிலடி!
எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும், எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் தரப்பு எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும், அத்தனை முறையும் எங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதேபோல், ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று கூறிய அவர், அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத்-ம் அதிமுகவில் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையிலும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

75 கிலோ கேக்
பின்னர் அங்குள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்தார். ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலை சின்னத்துடன் கூடிய 75 கிலோ எடையிலான பிரம்மாண்ட கேக்கை வெட்டி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜெயக்குமார் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுகவுக்கு துரோகம் செய்த ஓபிஎஸ் போன்றவர்கள் அடையாளம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எங்களின் பயணம் நிச்சயம் வெற்றிப் பயணமாக தொடரும். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக பெறும் வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தெரிவித்தார்.

எங்களுக்கே வெற்றி
தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்புக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுவது பற்றிய கேள்விக்கு, அதிமுகவின் சட்டப்படி சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறோம். ஓபிஎஸ் எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும், அத்தனை முறையும் நாங்கள் தான் வெற்றிபெறுவோம். திமுகவுடன் கைகோர்த்து அதிமுகவை அழித்துவிட வேண்டும் என நினைத்தவர்கள் அடையாளம் இல்லாமல் போய்விட்டனர். தொண்டர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள் என்று கூறினார். பின்னர் ஓபிஎஸ் ஆதரவு எம்பி மற்றும் எம்ஏஎல்-க்களின் நிலை பற்றிய கேள்விக்கு, ஓபிஎஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டோம்.

ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியில் இல்லை
சசிகலா , டிடிவி தினகரன் ஆகியோருக்கும் அதே நிலைதான். ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எப்படி தந்தைவிட்டு வருவார். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே நாடாளுமன்றத்திலும் கடிதம் கொடுக்கப்பட்டுவிட்டது. அதனால் அவரும் கட்சியில் இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தல் ஆணையத்தை அதிமுகவின் நிர்வாகிகள் சந்திக்க உள்ளார்கள். பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக் கோரி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications