1987-ல் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ பதவி ராஜினாமா- 36 ஆண்டுக்குப் பின் சட்டசபைக்குள் நுழைவாரா?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் 36 ஆண்டுகளுக்கு முன்னர் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் நுழைவாரா ஈவிகேஎஸ் இளங்கோவன் என்பது எதிர்பார்ப்பு.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தை பெரியாரின் பேரனாகிய ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை ஈவிகே சம்பத், திக- திமுக, தமிழ் தேசிய அரசியல், காங்கிரஸ் என பயணித்தவர். அவரது தாயார் சுலோச்சனா சம்பத், அதிமுகவில் இருந்தவர்.
1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு அமோக வெற்றியைப் பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அப்போது காங்கிரஸ் கட்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமையிலான கோஷ்டியில் இருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
எம்ஜிஆர் மறைவின் போது அதிமுக 2 அணிகளாக பிளவுபட்டது. சிவாஜி கணேசனின் காங்கிரஸ் கோஷ்டி, அதிமுக ஜானகி அணியை ஆதரித்தது. சட்டசபையில் ஜானகி அணியை ஆதரிக்க வேண்டும் என சிவாஜி கணேசன் விரும்பினார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதனை ஏற்கவில்லை. இதனால் சிவாஜி கணேசனுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் ஒருவர்.
1987-ம் ஆண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பின்னர் இளங்கோவன் எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் நுழையவில்லை. லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி, தோல்வி பெற்றார். 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.
தற்போது மீண்டும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இந்த முறை இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்றே கூறப்படுகிறது. இதனால் 36 ஆண்டுகளுக்குப் பின் எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் ஈவிகேஎஸ் இளங்கோவன் நுழைவார் என்பது அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு.
பெரியார் வீட்டு பேரன்.. சொல்லின் செல்வனின் மகன்! ஈரோட்டில் களமிறங்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்! யார் இவர்