முன்னாள் அமைச்சர் ஆவடி நாசருக்கு திடீர் உடல்நலக் குறைவு! அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: முன்னாள் அமைச்சரும், ஆவடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான நாசர், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் திமுக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஒரே நபர் ஆவடி நாசர் மட்டுமே. இத்தனைக்கும் இவர் முதலமைச்சருடன் ஆரம்பக் காலத்தில் ஒன்றாக பயணித்தவர். ஸ்டாலினுக்கும் நாசருக்கும் இடையேயான நட்பு என்பது இன்று நேற்றல்ல ஏறத்தாழ 30 ஆண்டுகால நட்பு என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞரணி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஸ்டாலினுடன் தமிழ்நாடு முழுவதும் பயணித்த மூன்று பேரில் நாசரும் ஒருவர்.

திமுகவில் படிப்படியாக முன்னேறி அமைச்சர் பதவியை அடைந்தவர் நாசர். கடந்த மே மாதம் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தனது தொகுதிப் பணிகளையும், மாவட்டச் செயலாளர் என்ற முறையில் திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் கட்சிப் பணிகளையும் கவனித்து வந்தார்.
இதனிடையே இவருக்கு அவ்வப்போது வயிற்றுவலி ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் வலி அதிகமாகியதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆவடி நாசருக்கு உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதில் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அறுவைச் சிகிச்சை மூலம் அவற்றை அகற்ற மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் ஆவடி நாசர் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை எதையும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இது குறித்து தகவலறிந்த ஆவடி நாசர் ஆதரவாளர்கள் அவரது மகன் ஆசிம் ராஜாவை தொடர்பு கொண்டு நாசரின் உடல் நிலை பற்றி அக்கறையோடு விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications