அதிமுக-பாஜக மோதலுக்கு முற்று புள்ளி வச்சாச்சு! பெரிய விரிசில் இல்லை! பளீச் என சொல்லும் ஜெயக்குமார்
சென்னை: அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Recommended Video
கடந்த வாரம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் பாஜகவை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்.

சாடல்
அதாவது தமிழக மக்கள் பாஜக ஆட்சிக்கு வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று விமர்சித்து இருந்தார். தமிழ்நாட்டில் இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம் என்றும் பாஜகவால் இங்கு எதுவும் செய்ய முடியாது என்றும் சாடியிருந்தார். மேலும், பாஜக தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது என்றும் ஆனால் அது உண்மையில்லை என்றும் அவர் சாடியிருந்தார்.

பதிலடி
இதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி, வி.பி, துரைசாமி, ஹெச். ராஜா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் சாடியிருந்தார். இது அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையேயான மோதலாக உருவெடுத்துள்ளது. பாஜகவினர் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி தொடங்கி பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில் இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெயக்குமார்
கண்ணியமிகு காயிதே மில்லத்தின் 127ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

திமுக மீது அட்டாக்
முதலில் திமுக அரசைச் சாடி பேசிய அவர், "கமிஷன், கலெக்ஷன், கரப்ஷென் இதுதான் திமுக. இந்த ஆட்சியில் திமுக செய்த ஊழல் விவகாரங்களைக் கொண்ட பட்டியலை அதிமுக ஏற்கனவே ஆளுநரிடம் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இப்போது அதிமுக தான் சிறந்த ஒரு எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட அதிமுகவே சிறந்த எதிர்க்கட்சி என்று மக்கள் சான்று அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்" என்றார்.

பாஜக
தொடர்ந்து பாஜக விவகாரங்கள் குறித்துப் பேசிய ஜெயக்குமார், "ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அப்துல் கலாம் சொன்னது போலக் கனவு காண்பது அவர்களின் லட்சியம். அதில் யாரும் குறுக்கிட முடியாது. ஆனால் மக்கள் செல்வாக்கு அதிமுகவுக்குத் தான் எப்போதும் இருந்து வருகிறது. அதேநேரம் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே இப்போது விரிசல் இல்லை. அதிமுக பாஜக இடையே இருந்த வார்த்தை மோதலுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தாகிவிட்டது" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications