"ஓபிஎஸ் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.. நல்லா கமெடியும் பண்றாரு" விட்டு விளாசும் ஜெயக்குமார்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வத்தை மிக கடுமையாகச் சாடி உள்ளார்.
Recommended Video
அதிமுக உட்கட்சி விவகாரம் தான் கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாடு அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறி இருந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி இருந்தது.

அதிமுக
முதலில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். மேலும், அடுத்த4 மாதங்களில் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் நில்லாமல், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கச் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஓபிஎஸ் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களாகக் கருதப்படும் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் கட்சியிலிருந்து அன்றே நீக்கப்பட்டனர்.

நீக்கம்
இதற்கிடையே நேற்று ஓபிஎஸ் மகன்கள், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 18 பேரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட 22 பேரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இப்படி மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் கமிஷன்
அதிமுக தேர்தல் அலுவலகம் இந்த விவகாரத்தில் சீல் வைக்கப்பட்டு உள்ளது. அதிலேயே இதுவரை எவ்வித முடிவும் எடுக்க்படவில்லை. இதற்கிடையே இரு தரப்புமே தேர்தல் ஆணையத்திற்குச் சென்றுள்ளனர். தங்கள் தரப்பு தான் உண்மையான அதிமுக என்றும் தாங்கள் நீக்கி உள்ளது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்குத் தெரியப்படுத்தி உள்ளனர். இந்தச் சூழலில் ஓபிஎஸை கடுமையாகச் சாடி ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜெயக்குமார்
இது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஓ.பன்னீர்செல்வம் என்னை எல்லாம் நீக்குவதாக நேற்று அறிவித்து உள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், அந்த லெட்டர் பேடை பார்த்தீர்களா. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், ஓபிஎஸ் இப்போது தனித்துவிடப்பட்டுள்ளார். அவர் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு. சிறிய விஷயத்தில் கூட அவரால் கவனம் செலுத்த முடியவில்லை.

மன ரீதியான பாதிப்பு
அந்த லெட்டர் பேடை பார்த்து இருந்தால் உங்களுக்குத் தெரிந்து இருக்கும். எங்களை 14.7.2021இல், அதாவது கடந்த ஆண்டு நீக்குவதாக அறிவித்து இருக்கிறார். இதைக் கூட கவனிக்க முடியாத நிலையில் தான் அவர் இருக்கிறார். இதில் இருந்தே அவரது மனம் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது நமக்குத் தெரிகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் மனம் வருந்தி, இதைக்கூடக் கவனிக்க முடியாத நிலையில் உள்ளார்.

ஈபிஎஸ் தலைமை
அதிமுக பொதுக்குழு கூடி அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட முடிவு செய்துள்ளோம். அவரை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்துள்ளோம். எடப்பாடி பழனிசாமியும் அவரது கடைமையைச் செய்யத் தொடங்கிவிட்டார். எனவே, கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட அதிகாரம் எங்களுக்கு மட்டும் தான் உள்ளது.

காமெடி பண்றாரு
ஓபிஎஸ் தரப்புக்கு அதிகாரம் இருப்பதாகச் சொல்வது கேலிக்கூத்தானது. எள்ளி நகையாடக்கூடியதாகவே பார்க்க முடியும். சுருங்கச் சொன்னால் ஓபிஎஸ் அறிவிப்பு கமெடியான ஒன்று தான்" என்ற ஓபிஎஸை மிகக் கடுமையாக ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பதே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications