வேலை வாங்கி தருவதாக மோசடி.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு... ஜாமீன் கோரி மனு
சென்னை: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட் மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட் மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் மீது புகார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் விருதுநகர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி என்பவரும் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக தன்னிடம் 30 லட்ச ரூபாய் பெற்றதாகவும் இருப்பினும் வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

திடீர் திருப்பம்
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் நண்பரும் அதிமுக வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளருமான விஜய நல்லதம்பியிடம் கடந்த செப். 25ஆம் தேதி போலீசார் விசாரணை நடத்தினர், அப்போது காவல் கண்காணிப்பாளர் முன் ஆஜரான விஜய நல்லதம்பி பணத்தைத் திருப்பி அளித்துவிடுவதாக உறுதி அளித்திருந்தார். இதனிடையே திடீர் திருப்பமாக ஆவின் நிறுவனத்தில் பலருக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னிடம் இருந்து ரூபாய் 3 கோடி வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு
இந்த புகார்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான புகார் அளிக்கப்பட்டவுடனேயே முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜாமீன் மனு
அந்த மனுவில், "பணத்தை இழந்தவர்கள் விஜய நல்லதம்பியிடமே பணத்தைக் கொடுத்தாக கூறியுள்ளனர். ஆனால் எனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புகார் அளித்தவர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இந்த வழக்கில் என்னைக் கைது செய்ய வாய்ப்புள்ளதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications