கோடை விடுமுறைக்கு ஸ்பெஷல் அறிவிப்பு! சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை: கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சென்னை-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இம்மாதம் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த ரயில் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும். எடை குறைவான இந்த ரயில் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் அதேபோல மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும். இந்த ரயில் சேவையை நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் தொடங்கி வைத்து வருகிறார். தமிழகத்தை பொறுத்த அளவில் சென்னை-நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த ரயில் ஜனவரி 25ம் தேதியுடன் தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது. ஏற்கெனவே, சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதால், நாகர்கோவிலுக்கான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ரயில் நாளை முதல் வரும் ஏப்ரல் 25ம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
அதாவது, சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் வண்டி எண் 06067 வந்தே பாரத் ரயில் நாளை முதல் ஏப்.25 வரை இயக்கப்படும். அதேபோல, நாகர்கோவிலிருந்து இயக்கப்படும் வண்டி எண் 06068 கொண்ட வந்தே பாரத் ரயில் நாளை முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, வண்டி எண் 06030 திருநெல்வேலியில் இருந்து ஞாயிறு தோறும் மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்பட்டு வரும் ரயிலானது ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை 8 டிரிப்புகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வண்டி எண் 06029 மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கட்கிழமை திருநெல்வேலி செல்லும் ரயிலானது ஏப்.8ம் தேதியிலிருந்து முதல் மே.27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications