ரயில் நிலையங்களில் வந்தாச்சு சூப்பர் வசதி.. பயணிகளே இதுதான் ரியல் குட்நியூஸ்..தெற்கு ரயில்வே அசத்தல்
சென்னை: ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்களில் யு.பி.ஐ மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பணிப்பதை தான் முதல் தேர்வாக வைத்திருப்பார்கள். வேறு ஆப்சன் இல்லை என்கிற போது தான் பேருந்துகளில், சொந்த வாகனங்களில் பயணிக்க விரும்புவார்கள்.. இதற்கு முக்கிய காரணம் குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம், விரைவான பயணம் போன்றவை தான்.. இந்த காரணங்களால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

ரயில்களை பொறுத்தவரை பயணம் மேற்கொள்வோர் பெரும்பாலும் முன்கூட்டியே திட்டமிட்டு, டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க முடியும். ஆனால் கடைசி நேரத்தில் பயணிக்க விரும்புவோர், முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆகியோர் அன்ரிசவ்டு பெட்டிகளில் தான் பயணிக்க முடியும். முன்பதிவு டிக்கெட்டை பொறுத்தவரை இணையதளம் மூலமாக டிக்கெட் எடுக்க முடியும்.
அதேநேரம், முன்பதிவில்லாத டிக்கெட் பெற யுடிஎஸ் செயலி மூலமாக எடுக்கலாம் என்றாலும் இன்னமும் பெரிய அளவில் அது நடைமுறையில் செட்டாகவில்லை. ரயில் நிலையங்களில் நிற்கும் பயணிகள், நேராக ரயில் நிலையத்தில் எடுப்பதே சிறப்பானது என்று விரும்புகிறார்கள்.. அதேநேரம் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு சென்று வரிசையில் நின்றுதான் டிக்கெட் எடுக்க வேண்டிய நிலையே தொடர்கிறது.
முன்பதிவில்லாத டிக்கெட்களை கவுன்ட்டரில் எடுத்தால், பணத்தை கொடுத்து எடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இங்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை கொண்டுவர பயணிகள் கோரிக்கை வைத்து வந்தார்கள்.
இதனிடையே இந்தியாவில் மத்திய ரயில்வே உள்பட பல்வேறு ரயில்வேயில் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை (யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி) ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தி இருந்தது.
இதன்மூலம், பணத்தை செலுத்தாமல் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையில் யுபிஐ மூலம் ஸ்மார்ட்போனில் இருந்து பணத்தை அனுப்ப முடியும். தெற்கு ரயில்வேயில் பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்களில் இந்த வசதி விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவு டிக்கெட் கவுன்ட்டர்களில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறை ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்பட சில முன்பதிவில்லாத கவுன்ட்டர்களில் இந்த வசதி இருக்கிறது. சென்னை ரயில்வே கோட்டத்தில் மேலும் சில முன்பதிவில்லாத கவுன்ட்டர்களில் சோதனை அடிப்படையில் இந்த வசதி தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்ற கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்களில் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications