"விஜய் வேண்டுமென்றே தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம்” - உண்மை கண்டறியும் குழு பேட்டி
சென்னை: "நடிகர் விஜய் வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த இடத்துக்கு தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம். விஜய் உடன் இருந்த பாதுகாவலரே Crowd bursting என அழுத்தமாகச் சொன்னபிறகும், விஜய் தனது பேச்சை தொடங்கியுள்ளார். மக்களின் மீது அவருக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே விஜய்யின் செயல் காட்டுகிறது." என பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரம் நடைபெற்றது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டமைப்பு சார்பில் 13 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கரூருக்கு சென்று சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலுன் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து, உண்மை கண்டறியும் குழுவினர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் பேசுகையில், "நடிகர் விஜய் வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த இடத்துக்கு வந்ததே கூட்ட நெரிசலின் முக்கிய காரணமாக பார்க்கிறோம். விஜய் உடன் இருந்த பாதுகாவலரே Crowd bursting என அழுத்தமாகச் சொன்னபிறகும், விஜய் தனது பேச்சை தொடங்கியுள்ளார். மக்களின் மீது அவருக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே விஜய்யின் செயல் காட்டுகிறது.
விஜய்யின் வாகனம் கரூர் சாலையில் செல்லும்போது இடது பக்கம் சென்று யூ-டர்ன் செய்து திரும்பாமல் வலது பக்கம் தவறான பாதையில் வந்துள்ளது. போலீசாரின் அறிவுறுத்தலை மீறி நடிகர் விஜய்யின் பிரச்சார வாகனம் தவறான பாதையில் வந்ததும் முக்கியமான காரணம்.
கிராமங்களில் பெண்கள் ஆண்களுடன் நிற்க மாட்டார்கள். பெண்கள், குழந்தைகள் ஒரு புறத்தில் கூட்டமாக நின்றிருந்தனர். வாகனம் வந்து நின்ற இடம் பெண்கள் இருந்த இடம். வண்டி வந்ததும் அங்கு இருந்தவர்கள் எங்கு செல்வார்கள்? மொத்தமாக அவர்கள் பின்னால் நகரும்போது நெரிசல் அதிகமாகி, கூட்டம் நசுங்கி, நிலைகுலைய வைத்துவிட்டது. விஜய் வாகனம் உள்ளே வரும்போதே கூட்டம் நசுங்கி மூச்சு விட சிரமப்பட்டுள்ளனர். இந்த கூட்ட நெரிசல் யாருக்காக இருந்தாலும் ஆபத்து.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர் தேர்தலை நடத்த வேண்டும் என முன்பு ஒரு சம்பவத்தில் நீதியரசர் சந்துரு ஒரு நபர் ஆணைய விசாரணை பரிந்துரையில் தெரிவித்திருந்தார். நாங்களும் எங்கள் அறிக்கையில் அந்த முக்கியமான பரிந்துரையை செய்துள்ளோம்." எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், "விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது முக்கியமான விஷயம். விஜயகாந்த் எந்தக் கூட்டத்துக்கு வந்தாலும் தண்ணீர் இருக்கிறதா? எனக் கேட்பார். அதுதான் அவசியம். காவல்துறை உள்ளே வந்து ஒழுங்குபடுத்தவில்லை என்கிறார்கள். ஒரு கூட்டத்தை நடத்தும்போது, நம் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை போலீசாருக்கு நாம் தருவது சரியாக இருக்காது. அதில் குழப்பம் செய்துவிட்டார்கள்.
இந்த துயரச் சம்பவத்துக்கு எவருடைய சதியோ, உள்நோக்கமோ காரணம் அல்ல என்று உறுதியாக நம்புகிறோம். இதில் ஒரு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கமும் இல்லை. காலை 8.45க்கு நாமக்கல்லுக்கு வந்திருக்க வேண்டிய விஜய் அந்த நேரத்தில் தான் சென்னையில் தனது வீட்டில் இருந்தே கிளம்புகிறார். இதுதான் அடுத்தடுத்த தாமதத்திற்கு தொடக்கமாக இருந்துள்ளது.
விஜய் ரசிகர் கூட்டத்தை பெருமளவில் கூட்டி, கூட்டம் காட்டும் எண்ணத்தில், நாமக்கல்லிலிருந்து கரூர் வரும் வழிகளில், வேண்டுமென்றே பல இடங்களில் வண்டியை மெதுவாக இயக்க செய்திருப்பதாகத் தெரிகிறது. நாமக்கல்லில் இருந்து கரூர் பைபாஸுக்கு அதிகபட்சம் 45 நிமிடத்தில் வர முடியும். ஆனால், பல மணி நேரம் பயணித்து வந்துள்ளார். இது கரூர் கூட்ட நெரிசலுக்கு முக்கியமான காரணம்.
விஜய் பரப்புரை நிகழ்வு நடத்தத் திட்டமிட்டிருந்த இடத்திற்கு 50 மீட்டருக்கு முன்னரே காவல் துறை கூறியபடி வாகனத்தை நிறுத்திப் பேசியிருந்தால், நெரிசல் ஏற்படும் வாய்ப்புகளை தவிர்த்திருக்க முடியும். மேலும், விஜய் வண்டி கூட்டத்திற்குள் வந்த பிறகு, 20 பேர் கொண்ட ஒரு குழு கூட்டத்தை மஞ்சள் வண்ணக் கயிறு கொண்டு உள்நோக்கி தள்ளியதாக கூறப்படுகிறது.
மதிய நேரங்களிலே மேளம், ஆட்டம் பாட்டம் என மக்கள் கூட்டம் இருந்துள்ளது. அன்று காலையிலிருந்து மாலை வரை மக்கள் கூடியிருந்திருக்கின்றனர். விஜய்யின் பரப்புரை வண்டி சம்பவ இடத்திற்கு வரும் போது தான் காவல் துறையினரும் வந்துள்ளனர். கரூரில் வாகனம் நிறுத்துவதற்கான வசதியுள்ள இடமாக கருதப்பட்ட வேலுசாமிபுரத்தில், ஒவ்வொரு சந்துக்குள்ளும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை காவல் துறை தடுக்க தவறிவிட்டது. நெரிசலில் மூச்சுத்திணறி, தப்பிக்க சந்துகளுக்குள் நுழைந்த மக்கள் இரு சக்கர வாகனங்களால் நிலைதடுமாறி விட்டனர்.
உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே கால தாமதமாக விஜய் வந்துள்ளார். அதுவே நெரிசலுக்கும், உயிரிழப்புக்கும் காரணம். தவெக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் எவ்வித பொறுப்புணர்வும், மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாதவர்களாக நடந்துள்ளனர். ரசிகர் கூட்டத்தை காட்டி கட்சி நடத்தி விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்கள்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது சிலர் மயங்கி விழுந்துள்ளனர். அதனால், விஜய்யின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் செருப்பை தூக்கி வீசியதாக அருகிலிருந்தவர்கள் கூறுகின்றனர். விஜய் கூட்டத்திற்கு வருபவர்கள் அங்குள்ள பேனர்களை கிழித்து அதன் மீது இருந்தும் பார்த்தனர். ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட கட்சிகளில் உள்ளவர்கள் தங்களின் தலைவர்கள் பேனர்களைக் கிழிக்க மாட்டார்கள். மேலும், விஜய் வரும் வரையில் காவல்துறையினர் யாரும் வரவில்லை எனவும், சிலர் மயங்கிய பின்னர் தான் ஆம்புலன்ஸ் உள்ளே வந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்" எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications