ரஜினி பொது சொத்தல்ல.. அவருக்கென குடும்பம் இருக்கு.. உடம்பும் இரும்பல்ல.. ரசிகர்களே புரிஞ்சிக்கோங்க!
சென்னை: ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் அவர் மன நிம்மதியை கருதியும் அவரது முடிவை ரசிகர்கள் மதிக்க வேண்டுமே தவிர அவரை தூற்றக் கூடாது. அவர் தனி மனிதர் அல்ல.
ரஜினி அரசியலுக்கு வரேன் என்றார், பின்னர் 3 ஆண்டுகள் அமைதியாகவே இருந்தார். நடுவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆழப்பார்க்க வருமாறு அவருக்கு நெருக்கமானவர்கள் அழைத்தார்கள், ஆனால் அவர் வரவில்லை.
இ்நத நிலையில் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என டிசம்பர் 3-ஆம் தேதி திடீரென அறிவித்தார். இதனால் பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள் நேற்று ரஜினியின் அறிக்கையை பார்த்து சோகமடைந்துவிட்டார்கள்.
பாஜக ஷெல்வி .. ரஜினியை நம்பி.. அன்னிக்கு அடிச்சு சொன்னாரே.. இப்ப என்ன பண்ண போறாரோ!!
புரிதல் வேண்டும்
திருச்சியில் ரசிகர் ஒருவர் ரஜினியின் பேனரை எரித்தார். பின்னர் 23 வயதிலிருந்து காத்திருந்ததாகவும் தற்போது தனக்கு 49 வயதாவதாகவும் தனது ஆதங்கத்தை அறிவித்தார். அது போல் போயஸ் தோட்டத்தில் ரசிகர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். எல்லாம் சரி ஆனால் ரசிகர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். ரஜினி தனது முடிவை உடல் நிலையைக் காரணம் காட்டி எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
நிம்மதி
எனவே அவரை உயிருக்கு உயிராக மதிக்கும் ரசிகர்கள் இந்த முடிவை மதித்து அவரை நிம்மதியாக ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும். டாக்டர்கள் அவரை முழு ஓய்வெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். இது போன்ற போராட்டங்களை அவர் பார்த்தால் அவருக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்தால் அவருடைய மன நிம்மதியும் சேர்ந்து கெடும் வாய்ப்புகள் உள்ளன.
பரிபூரண ஒத்துழைப்பு
எனவே அவர் மீண்டும் சரியாகி அடுத்தடுத்து படங்கள் கொடுக்க வேண்டும் என்றால் அவருக்கு நல்ல ஓய்வு தேவை. அதற்கு ரசிகர்களின் பரிபூரண ஒத்துழைப்பும் ஆதரவும் மிக மிக அவசியம். ரஜினியை நம்பியிருந்தது ரசிகர்கள் மட்டுமல்ல.. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்தான்.
அரசியல் முடிவு
அவர்களே ரஜினியை புரிந்து கொண்டு அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது போல ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து ரஜினிக்கு நல்ல ஓய்வு கிடைக்க வழி செய்ய வேண்டும். இதைத்தான் ரஜினியும் கூட தனது ரசிகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். நாளை கொரோனா ஒரு வேளை முழுமையாக அழியும் பட்சத்தில், அப்போது ரஜினியும் நல்ல உடல் தெம்புடன் இருக்கும் பட்சத்தில் அவர் மீண்டும் அரசியல் முடிவை எடுக்கக் கூட வாய்ப்புள்ளது.
மனசோர்வு
ரசிகர்களின் அழுத்தத்தால் மனம் சோர்வடைந்து அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டால்? ரஜினியில்லாத ஒரு சினிமாவை நினைத்து பார்க்க முடியுமா? ஆண்டுக்கு ஒரு முறை ரஜினி பட ரிலீஸ் அன்றுதானே உண்மையான ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு எல்லாமே?
ரஜினி ரசிகர்கள்
தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் உள்ளதும் போய்விடும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டு ரஜினி ரசிகர்கள் அமைதி காத்து தங்களது அபிமான நடிகரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஒத்துழைப்பதுதான் இப்போதைய முக்கியத் தேவை. இமயமலைக்கு சென்றால் கிடைக்கக் கூடிய அளவுக்கான மன நிம்மதியை ரசிகர்கள் தனக்கு கொடுக்க வேண்டும்.
ரஜினி கோரிக்கை
அவரது வாழ்க்கையை அவர் வாழ விட வேண்டும் என்பதுதான் ரஜினியின் கோரிக்கையாகும். ரஜினி தனிமனிதர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான முடிவை அறிவிக்க அவருக்கு எத்தனை வலிகள் இருந்திருக்கும், வேதனை இருந்திருக்கும், யாரெல்லாம் அவரை கிண்டல் செய்வார்கள்? இதிலிருந்து அவர் எப்படி வெளியே வர போகிறார் என்றே தெரியவில்லை. இந்த நிலையில் ரசிகர்களும் போராட்டம் ஆர்ப்பாட்டம் என கிளம்பாதீங்க...