ஓட்டு போட சொந்த ஊர் திரும்பியதால் நேர்ந்த விபரீதம்.. கிணற்றில் சிக்கி தந்தை, மகன் பலி
சென்னை: ஓட்டு போட வந்த கூலித் தொழிலாளி நீச்சல் கற்றுக் கொடுத்தபோது நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற கிணற்றில் குதித்ததால் தந்தையும் மகனும் சேற்றில் சிக்கி பலியாகிவிட்டனர்.
திருப்பத்தூரை அடுத்த கசிநாயக்கன்பட்டி கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (35). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், கீர்த்தனா (10) என்ற பெண் குழந்தை மற்றும் ஜெகதீஷ் (8) என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இவர் சென்னையில் கூலித் தொழில் செய்து வருகிறார் மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வருவது வழக்கம். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
பிளாஸ்டிக் டப்பா
நேற்று காலை வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்திவிட்டு வீடு திரும்பிய பாலாஜி தனது குழந்தை ஜெகதீஷுக்கு நீச்சல் கற்றுத் தர 5 லிட்டர் எண்ணெய் சேமிக்கும் பிளாஸ்டிக் கேனை எடுத்துக் கொண்டு தங்களது விவசாயக் கிணற்றில் சென்று ஜெகதீசனின் இடுப்பில் பிளாஸ்டிக் டப்பாவை கட்டி நீச்சல் பழக கற்றுக் கொடுத்துள்ளார்.
கிணற்றில்
அதன் பின் திடீரென கயிறு அவிழ்ந்து ஜெகதீஷ் கிணற்றுக்குள் சென்றுள்ளான். இதனை சற்றும் எதிர்பாராது கிணற்றின் மேல் அமர்ந்து கொண்டிருந்த பாலாஜி தனது குழந்தை கிணற்றுக்குள் செல்வதைப் பார்த்து குழந்தையை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
சேற்றில் சிக்கினார் தந்தை
குதித்த வேகத்தில் பாலாஜி கிணற்றில் உள்ள சேற்றில் சிக்கி கூக்குரலிட்டுள்ளார். இந்த சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பாலாஜி மற்றும் அவருடைய மகன் ஜெகதீஷ் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தந்தையும் மகனும் பலி
இதன் காரணமாக பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கந்திலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டு போட ஊர் திரும்பிய பாலாஜி மற்றும் அவருடைய குழந்தை இருவரும் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.